பக்கம் எண் :

77
 
     கி.பி.600 முதல் 630 வரை ஆண்ட பல்லவப் பேரரசன் மகேந்திரவர்மன்
ஆவான். இவன் தொடக்கத்தில் சமண மதத்தவனாயிருந்து திருநாவுக்கரசு நாயனாரின்
முயற்சியால் சிவநெறி தழுவினான். சமணப் பள்ளிகள் பலவற்றை அழித்து அவற்றைக்
கொண்டே அவன் 'குணபரன்' அல்லது 'குணதரன் என்ற தன் பெயரால்
'குணதரெச்சுரம்' என்ற ஒரு சிவன் கோயில் கட்டினான் என்று தெரியவருகிறது.
இசையிலும் சிற்பத்திலும் சமஸ்கிருதத்திலும் இவன் வல்லவனாயிருந்தான்.
சமணனராயிருக்கும் போது இவன் இயற்றிய 'மத்தவிலாசம்' என்ற களிநாடகம்
அத்துறையில் தலைசிறந்த ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது. சித்தன்னவாசல் போன்ற
பல குகைக் கோயில்களின் ஓவியம் இவன் காலக் கலைப்பெருமைக்குச் சான்று ஆகும்.
சாளுக்கியர் இவன் காலத்திறுதியில் பல்லவரை முறியடித்துத் தொண்டை நாட்டையே
சூறையாடினதாக அறிகிறோம்.
 
பல்லவர் தம் புகழின் உச்சி
 
     அடுத்த பேரரசனாகிய முதலாம் நரசிம்மவர்மன் கி.பி. 63 முதல் 668 வரை
ஆண்டான். இவன் சாளுக்கியர் மீது பழி தீர்த்து கொண்டான். பரியளம், மணிமங்கலம்,
சூரமாரம் ஆகிய இடங்களில் இவன் சாளுக்கியரை வென்று அவர்கள் தலைநகரமாகிய
வாதாபியை அழித்துத் தரை மட்டமாக்கினான்.
 
     வடநாட்டில் ஹர்ஷன் பேரரசனாக ஆண்ட காலம் இதுவே. சாளுக்கியரும்
இச்சமயம் உச்சநிலை எய்தியிருந்தனர். சாளுக்கியர் பேரரசனாகிய இரண்டாம்
புலிகேசியின் ஆட்சித் தொடக்கத்தில் ஹர்ஷன் தெற்கே படையெடுத்து வந்திருந்தான்.
அவனை புலிகேசி முறியடித்துப் பின் அரசியல் மதி நுட்பத்துடன் சமரசம் செய்து
கொண்டான். ஆயினும் 642-ல் அவன் பல்லவரால் முறியடிக்கப்பட நேர்ந்தது.