பக்கம் எண் :

9

 
காயல், கொற்கை, உவரி, விழிஞம், சேரன் தொண்டி, வஞ்சி, முசிறி ஆகிய
துறைமுகங்கள் தென்னாட்டில் ஆக்கமுற்று இருந்தன. இவற்றுள் பல நகரங்கள் மேலை
உலக வாணிகமும், கீழை உலக வாணிகமும் வந்து கூடும் உலகக் கடல் வாணிகத்
துறைகளாயிருந்தன.
 
     கடற்கரையும் கடலும் வாணிகத்துக்கு மட்டுமே உதவுபவை அல்ல. அவை உப்பு,
மீன், மீனெண்ணெய், பவளம், முத்து, சங்கு, சிப்பிகள் ஆகிய கடல் தரு
செல்வங்களையும் தருகின்றன. முதன் முதலில் கடலில் மூழ்கி முத்தும் சங்கும்
எடுத்தவர்கள் தென்னாட்டுத் தமிழரே. சங்கறுத்து வளையல் முதலியன செய்தல்
இரண்டாயிர ஆண்டுகட்கு முற்பட்டே தமிழகத் தொழில்களுள் ஒன்றாயிருந்தது.
முத்துக்குளித்தல் இன்றளவும் தென்னாட்டின் தனிச் சிறப்புத் தொழில் ஆகும்.
பாரசிகக்குடாவிலும், பண்டைக் கொற்கையின் அருகேயுள்ள தூத்துக்குடிப்
பகுதியிலும்தான் இன்றும் முத்து எடுக்கப்படுகின்றது.
 
     தென்னாட்டில் வடக்கேயுள்ள விந்தியா, சாத்பூராமலைகளை யல்லாமல்,
மேல்கரையோரமாக மேற்கு மலைத்தொடரும், கீழ்க்கரையோரமாகக் கிழக்கு
மலைத்தொடரும் உள்ளன. மேல் தொடருக்கும் கடலுக்கும் இடையே 80 கி.மீ. குறைந்த
அகலமுடைய கடல் தீரம் இருக்கிறது. கீழ்த்தொடரோ கடலிலிருந்து 160 கி.மீ. வரை
அகன்றும், தென்கோடியில் முற்றிலும் விலகி மேல் தொடருடன் இணைந்தும் கிடக்கிறது.
இதனால் தென்கோடியில் கிழக்குக் கரைத் தீரம் 480 கி.மீ.க்கு மேல் அகலமுடையது.
விந்திய மலைக்கும் இரு தொடர்களுக்கும் இடையேயுள்ள பகுதி ஒரே பெரிய மேட்டு
நிலமாகும். இதன் வடபகுதி தெக்காணம்: தென் பகுதி மைசூர்.
 
     கடலின் நீர்வளத்தை மலைகள் மழை வளமாகவும் ஆற்று வளமாகவும்
மாற்றுகின்றன. 2,40,000 செ.மீ. அடிவரை உயரமுள்ள