பக்கம் எண் :

     96
 
எல்லை வரை அதன் ஆற்றல் எல்லையும், பரப்பும் எட்டியிருந்தன. அத்துடன் சோழப்
பேரரசு பேரளவிலும், அதன்பின் வந்த பாண்டியப் பேரரசு ஓரளவிலும் தென்னாட்டின்
கடைசிக் கடற் பேரரசுகளாயிருந்தன.
 
     சோழப் பேரரசின் ஆட்சிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. 3-ம்
நூற்றாண்டிலிருந்து 9-ம் நூற்றாண்டுவரை தமிழக இயக்க மாயிருந்த பக்திஇயக்கத்தைத்
தென்னாடெங்கும் பரப்பியது சோழப் பேரரசர் ஆட்சியே. தமிழகத்துக்குஅப்பால்
தாய்மொழி இலக்கியங்கள் இந்த இயக்கங் காரணமாக வளர்ச்சியடைந்ததும் அவர்கள்
காலத்திலேயேயாகும். சோழர் ஆட்சி எல்லை கடந்து பக்தி இயக்கம் பரவவும்
தாய்மொழி இலக்கியங்கள் தோன்றி வளரவும் பல நூற்றாண்டு சென்றன என்பது
குறிப்பிடத்தக்கது.
 
     பாண்டியப் பேரரசு பரப்பில் சோழப் பேரரசைவிடச் சிறிது குறுகியதே. ஆயினும்;
ஆற்றலிலும், புகழிலும், செல்வ நிலையிலும் அது சோழப் பேரரசைத் தாண்டிச்
சென்றிருந்தது.
 
     தமிழகப் பேரரசுகள் நலிவுற்றபின், தமிழகத்துக்கு அப்பால் வடக்கே பாமனிப்
பேரரசும், தெற்கே விசயநகரப் பேரரசும் தோன்றின, சோழப் பேரரசும் தோன்றின.
 
சோழப் பேரரசு
 
     களப்பிரர் காலத்துக்குப்பின் ஆறாம் நூற்றாண்டு வரை முந்நூறாண்டுகளாக நாம்
சோழரைப் பற்றி எதுவும் அறிய முடியவில்லை. ஆனால் 6-ம் நூற்றாண்டிலிருந்து 9-ம்
நூற்றாண்டின் நடுப்பகுதிவரை அவர்கள் உறையூரையும் அதனைச் சூழ்ந்த பகுதியையும்
ஆண்ட சிற்றரசராக இயங்கினார். அவர்கள் பழம் பெருமை இக்காலத்திலும் முற்றிலும்
மறக்கப்பட்டு விட்டதாகக் கூறமுடியாது. ஏனென்றால் பாண்டிய பல்லவப் பேரரசர்
அவர்களுடன் மண உறவும் நேச உறவும் கொண்டிருந்தனர். அவர்களுக்கு உட்பட்ட
சிற்றரசராகவும் படைத்தலைவராகவும் அவர்கள் ஓரளவு புகழ் பெற்றனர்.