பக்கம் எண் :

     98
 
வலுப்படுத்திக் கொண்டான். மேற்குத் தொடரில் இருந்து கடல் வரை காவிரியின் இரு
கரைகளிலும் அவன் பல கோயில்கள் கட்டினான் என்று அன்பில் பட்டயங்கள்
குறிக்கின்றன.
 
     ஆதித்தனுக்குக் கோதண்டராமன் என்றொரு பட்டப் பெயர் உண்டு. காளத்தியில்
அவன் மறைந்த இடத்தில் அவன் மகன் முதலாம் பராந்தகன் கோதண்டராமேசுரம்
என்ற பெயரால் ஒரு கோவில் கட்டினான்.
 
முதலாம் பராந்தகன்
 
     முதலாம் பராந்தகன் (907-953) காலத்தில் சோழ அரசு திடுமென ஒரு பேரரசாக
விரைந்து வளர்ந்தது. பராந்தகன் வடக்கே பாணமன்னர், வைடும்பர் இருவரையும்
முறியடித்தான். பாணர் நாட்டைத் தன் நேச அரசனும் தன் மேலாட்சியை ஏற்றுக்
கொண்டவனுமான கங்க அரசன் இரண்டாம் பிருதிவீபதிக்குத் தந்தான். வைடும்பர்
நாட்டை தன் அரசுடன் சேர்த்துக் கொண்டான். சீட்புளி நாட்டை வென்றதனால்
வடக்கே அவன் ஆட்சி, நெல்லூர் வரை எட்டிற்று.
 
     தெற்கே பராந்தகன் பாண்டி நாட்டின்மீது படையெடுத்து அதை வென்றான்.
பாண்டியனோடு இலங்கை அரசன் படைகளையும் சேர்த்து அவன் வேலூர்ப் போரில்
வெற்றி கொண்டு, 'மதுரையும் ஈழமும் கொண்ட சோழன்' என்று விருது சூட்டிக்
கொண்டான். பாண்டியன் முதலில் இலங்கைக்கு ஓடிச் சென்றான். இலங்கை அரசன்
பாண்டியனை ஆதரித்தாலும், தம் அரசன் அவனுக்கு அடைக்கலம் தருவதை
உயர்குடிமக்கள் விரும்பவில்லை. ஆகவே அவன் சேர நாட்டுக்கு ஓடவேண்டி வந்தது.
சேரன் பாண்டியனுக்கு மட்டுமல்லாமல் - சோழனுக்கும் உறவினன். ஆகவே பாண்டியன்
தன் மணி முடியையும், இந்திர மாலை என்று புகழப்பட்ட தன் மாலையையும்
இலங்கையிலேயே விட்டுச் சென்றான்.