பக்கம் எண் :

41

மலையனார்                                         (சங்ககாலம்)

இவர் பாட்டு முதலியவற்றாற் பெயர் பெற்ற சங்கப் புலவர்களுள் ஒருவர்.தமது பாடலில் மலைவளத்தைப் பலபடக் கூறியுள்ளார். ‘மல்லற்றம்ம இம்மலைகெழுவெற்பு’ எனக்கூறிய அருந்தொடர் மொழியையே தமக்குப் பெயராகக் கொண்டுள்ளார்.

நூல் :நற்றிணை 93.

மள்ளனார்                                          (சங்ககாலம்)

இவர் பெயருக்குரிய காரணம் தெரியவில்லை. மள்ளர் என்பது வீரரைக் குறிக்கும். இத்தொகை நூல்களில் குறிப்பிடப்பெறும் கடுவன் மள்ளனார், மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவன் மள்ளனார் என்ற புலவர்கள் இவரினும் வேறானவர்கள்.

நூல் :குறுந்தொகை 72; நற்றிணை 204.

மறைஞான சம்பந்தர் (16 - நூ)

வே. பெ :கண்கட்டி மறைஞான சம்பந்தர்.
வாழ்விடம் :சிதம்பரம்.

மறைஞான சம்பந்தர் என்ற பெயரில் பலர் வாழ்ந்துள்ளனர். இவர்களில் மெய்கண்ட தேவரின் மாணவராகிய அருள்நந்தி சிவத்தின் அருள்பெற்ற மறைஞான சம்பந்தரினும் இவர் வேறானவர். இவரைக் கண்கட்டி மறைஞான சம்பந்தர் என்று அழைப்பர்.

உலக மக்கள் செய்யும் தீவினைகளைப் பார்க்க மனம் பொறாமையால் தமது கண்களைத் துணிகொண்டு மறைத்துக் கட்டிக்கொண்டு வாழ்ந்ததால் கண்கட்டி மறைஞான சம்பந்தர் என்று அழைக்கப் பெற்றார்.