உய்வனவு = 1. பிழைப்பு, வாழ்வு. 2. செழிப்பு, செழிம்பு. 3. ஈடேற்றம், வீடுபேறு. உய்யக்கொண்டான், உய்யவந்த தேவநாயனார் முதலிய பெயர்களில் உய்தல் ஈடேற்றத்தை உணர்த்தும். உய்தடி = தளிர்த்து வளரும் வேலிக் கொம்பு. உய் - உயல் = 1. தப்புதல். “உயலாகா வூழ்த்திறந்த வென்னார்” (நீதிநெறி. 30) 2. வாழ்தல். 3. உளதாதல். “செல்வ முயற்பால தன்றிக் கெடும்” (குறள். 437) உயலுதல் = 1. அசைதல். “உயலுங் கோதை” (பதிற். 52 17) 2. செல்லுதல், நடத்தல். உயல் - துயல். துயலுதல் = அசைதல். “துயல்கழை நெடுங்கோட்டு” (சிறுபாண். 265) உய - உய்வு = செல்லுகை. உயவு நெய் = வண்டிச் சக்கரத்திற்கு இடும் ‘மசகு’. உய - உயவை = 1. செல்லும் வழி. 2. காடு (பிங்.) 3. காட்டாறு (பிங்.) உய் - உயா = அசைவால் அல்லது வழிச்செலவால் உண்டாகும் வருத்தம், வருத்தம். “உயாவே உயங்கல்” (தொல். சொல். 369) உய - உயவு. உயவுதல் = வருந்துதல், “உண்டென வுணரா வுயவு நடுவின்” (பொருந. 38) உயவு - 1. வருத்தம். “உயவுநோய் கைம்மிக” (கலித். 58) 2. உயிர் பிழைக்கச் செய்யும் வழி. “உய்யா வருநோய்க் குயவாகும்” (கலித். 139) உயவு - உயவல் = வருத்தம். “சிதாஅ ரோம்பி யுடுத்த யுயவிற் பாண” (புறம். 69) உய - உயங்கு. உயங்குதல் - வருந்துதல். |