“உயங்குவள் கிடந்த கிழத்தியை” (தொல். பொருள். 146) 2. மெலிதல். “உயங்குசாய் சிறுபுறம்” (அகம். 19) 3. துவளுதல். “உயங்கு செங்கழு நீர்” (திருவாத. பு. மண் சுமந்த. 4) உயக்கம் = வருத்தம். “உண்ணா வுயக்கத்து” (மணிமே. 7 66) உய் - ஒய். ஒய்யல் = 1. செலுத்துகை (பிங்.) 2. கொடுக்கை. I. ஒய்தல் - செ.குன்றிய வினை; 1. விட்டொதுங்குதல். “ஒய்யெனத் தெழித்தாங்கு” (சிலப். 15 48, உரை) 2. தப்புதல். “ஓடியொளித் தொய்யப் போவான்” (பரிபா. 20 39) II. செ. குன்றாவினை. 1. செலுத்துதல். “ஒய்யு நீர்வழிக் கரும்பினும்” (பதிற். 87 4) 2. நீக்குதல். “ஒய்யா வினைப்பய னுண்ணுங் காலை” (சிலப். 14 33) 3. இழுத்தல். “கன்றுகா லொய்யும் கடுஞ்சுழி நீத்தம்” (அகம். 68) 4. கொடுத்தல். “வளராத பார்ப்பிற் கல்கிரை யொய்யும்” (நற். 356) ஒய் - ஓய் - ஓசு - ஓசுநன் = மீகாமன் (மரக்கலஞ் செலுத்துவோன்). உய் - இய் - இயவு = 1. செலவு. 2. வழி. “இயவிடை வருவோன்” (மணிமே. 13 16) “இடைநெறிக் கிடந்த இயவுக்கொண் மருங்கின்” (சிலப். 11 168) இயவு - இயவுள் = 1. நடத்தும் தலைமை. “இயவுள் யானை” (அகம். 29) 2. எப்பொருட்கும் இறைவன். M. iyavul. “பெரியோர் ஏத்தும் பெரும்பெய ரியவுள்” (திருமுருகு. 274) 3. தெய்வம் (பிங்.) 4. புகழாளன் (திவா.) 5. வழி (அகம். 29, உரை) இய - இயவை = 1. வழி (திவா.) 2. காடு (அக. நி.) |