“அம்பலும் அலரும் களவு” (தொல். 1085) அம்பல் - அம்பலம் = கூட்டம், கூடுமிடம். K. ambala, M. ampalam, Tu. ambila, S. ambara. “வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்” (சிலப். பதிகம், 41) அம்பல் - ஆம்பல் = பகலிற் குவியும் அல்லி, பலகோடி கொண்ட ஒரு பேரெண். K.abal, M.,Tu.ambal. “ஆம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற” (குறிஞ்சிப். 222) “ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ” (சிலப். ஆய்.பா.2) இரவில் மலர்வதால் அல்லி என்றும், பகலிற் குவிவதால் குமுதம் என்றும் பெயர் பெற்றிருத்தலும் காண்க. கும்முதல் = குவிதல். அமர்தல் = 4. இருத்தல். அமர்வு = இருப்பிடம். “அலிபுரு டோத்தம னமர்வு” (திவ். பெரியாழ். 4 7 8) M. amaruka. கிடையமர்தல் = மந்தையை இருத்துதல். அமைதல் = (5) தங்குதல். “மறந்தவண் அமையா ராயினும்” (அகம். 37) அமர்தல் = 5. படுத்தல். அமளி = படுக்கை. “அமளி யங்கட் பூவணைப் பள்ளி” (சீவக. 1710) M. amali (அமளி) அமர்தல் = 6. வேலையில் அமர்தல். T. amaru, K. amar. அமர்தல் = 7. அமைதியாதல், அடங்குதல், படிதல், இளைப் பாறுதல், இசைதல், அணைதல், தாழ்தல். அம்மை = 2. அமைதி. “அம்மையஞ் சொல்லா” (சீவக. 3131) 3. சொற்சுருங்கியும் அடி பல்காதும் அடங்கிநிற்கும் பனுவல் வகை. “சின்மென் மொழியாற் சீர்புனைந் தியாப்பின் அம்மை தானே அடிநிமிர் பின்றே” (தொல். 1491) |