பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

துணையின்று கழியாது’’ (தொல். பொருள். 122). 4. கூட்டாயிருப்ப - வன் - வள் - து. “நறுநுதலாள் நன்மைத் துணை’’ (நாலடி. 381). 5. இரட்டை. “துணைமீன் காட்சியின்’’ (கல்லா. 5 27). 6. இரண்டு. “துணையடி’’. 7. உதவி புரிவோன். “நானோர் துணைகாணேன்’’ (திருவாச. 25 10). 8. உதவி. “தங்குமா பொருளுந் தருமமுந் துணையா’’ (கம்பரா. பால. நகரப். 6). 9. நண்பன். “தந்துணைக் குரைத்து நிற்பார்’’ (சீவக. 465). 10. கணவன். “தாழ்துணை துறந்தோர்’’ (சிலப். 4 13). 11. மனைவி. “துணையொடு வதிந்த தாதுண் பறவை’’ (அகம். 4). 12. உடன்பிறப்பு. “துணையின்றிச் சேறல் நன்றோ’’ (கம்பரா. கும்பகர்ண. 158). 13. அளவு. “விருந்தின் றுணைத்துணை’’ (குறள். 87). 14. வரை (இடைச்சொல்). “தங்கரும முற்றுந் துணை’’ (நாலடி. 231).

துணங்கை = முடக்கிய இரு கைகளையும் விலாப்புடைகளில் ஒற்றி யடித்துக்கொண்டு, அசைந்தாடும் ஒருவகைக் கூத்து. “பிணந்தின் வாயள் துணங்கை தூங்க’’ (திருமுருகு. 56).

துண் - தூண் - திரண்ட கம்பம். “சிற்றில் நற்றூண் பற்றி’’ (புறம். 86). 2. பற்றுக்கோடு. “துன்பந் துடைத்தூன்றுந் தூண்’’ (குறள். 615).

. தூண்.

பல பொருள்கள் அல்லது கூறுகள் ஒன்றாகப் பொருந்தும் போது அல்லது சேரும்போது திரட்சியுண்டாவதால், பொருந்தற் கருத்தில் திரட்சிக் கருத்துத் தோன்றிற்று. “சேரேதிரட்சி’’ என்னுந் தொல்காப்பிய நூற்பாவை (346) நோக்குக.

தூண் - தூணம் = 1. பெருந்தூண். “பசும்பொற் றூணத்து’’ (மணிமே. 1:48). 2. பற்றுக்கோடு.

“அம்’ பருமைப்பொருட் பின்னொட்டு.

எ-டு: நிலை - நிலையம், மதி - மதியம் = முழுநிலா.

தூணம் -வ. ஸ்தூணா.

தூண் - (தீண்) - தீண்டு. தீண்டுதல் = 1. தொடுதல். “எங்கோலந் தீண்ட லினி’’ (பு. வெ. 9 50). 2. பாம்பு கடித்தல். “பதுமையைப் பாம்பு தீண்டிற் றென்றலும்’’ (சீவக. 1273). 4. பற்றுதல். “தீப்பிணி தீண்ட லரிது’’ (குறள். 227).

ம. தீண்டுக.

தீண்டு - சீண்டு. சீண்டுதல் = ஒரு பெண்ணைத் தீண்டிக் குறும்பு செய்தல்.