செய்தல் = 1, சிவத்தல், 2. கை சிவக்குமாறு வேலை செய்தல். 3. ஏதேனுமொரு வினை செய்தல். 4. செய்யுள் இயற்றுதல். “வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்’’ (நன். 268). 6. நூலியற்றுதல். ‘பொருள் செய்வித்தோன் தன்மைமுதல் நிமித்தினும்’’ (நன். 49). 7. உண்டாக்குதல். “செறிந்தேர் முறுவலாள் செய்தவிக் காமம்’’ (கலித். 140). 8. ஈட்டுதல். “செய்க பொருளை’’ (குறள். 759). 9. ஒத்தல். “வேனிரை செய்த கன்னி’’ (சீவக. 2490). தமிழருள் தொன்றுதொட்டு வெள்ளாளர், காராளர் என இரு வண்ணத்தார் இருந்து வந்திருக்கின்றனர். வெள்ளாளர் என்றது பொன்னிறத்தாரை. காராளர் என்றது குரால் (கபில) நிறத்தாரையும் கரியரையும். கரியரும் புதுநிறத்தார் முதல் கன்னங்கரியர் வரை பல திறத்தர். பொன்னரைச் சிவப்பர் என்பதுமுண்டு. மெய்வருந்தியுழைப்பின், வெள்ளாளர் அகங்கை சிவந்தும் காராளர் அகங்கை கருத்தும் போகும். அதனால், வினை செய்தலைக் குறிக்கச் செய்தல் கருத்தல் என்னும் இரு சொற்கள் தோன்றின. கருத்தல்வினை வழக்கிறந்து போயிற்று. இன்று அது கருவி, கருமம், கரணம் என்னும் பெயர்ச் சொற்களில் முதனிலையாக மட்டும் நிற்கின்றது. கரு என்னும் தென்சொல்லே வடமொழியிற் ‘க்ரு’ என்று திரியும். செய்ம்மை - செம்மை - செம். ஒ.நோ : வெள் - வெய் - வெய்ம்மை - வெம்மை - வெம். செம்மை = 1. சிவப்பு (திவா.). 2. செவ்வை (திவா.). 3. நேர்மை. “செம்மையி னிகந்தொரீஇ’’ (கலித். 14). 4. மனக்கோட்டமின்மை. “செம்மையுஞ் செப்பும்’’ (தொல். பொருள். 15). 5. கேது (சூடா.). 6. துப்புரவு. 7. அழகு. 8. பெருமை. “செம்மை சான்ற காவிதி மாக்களும்’’ (மதுரைக். 499). செம் = 1. சிவந்த. எ-டு: செந்நீர். 2. நேர்மையான. எ-டு: செங்கோலாட்சி. 3. நடுநிலையான. “செம்மனத்தான்’’ (நள. 46). 4. இலக்கணம் பிறழாத. எ - டுசெந்தமிழ். 5. முதிர்ந்த. எ செங்காய். 6. சொல்லழகில்லாத. எ-டு: செந்தொடை, 7. இயல்பான. “செம்மகள்’’ (கல்லா. 5 31). 8. தகுந்த, ஏற்ற. எ-டு: செந்துறை. 9. சமமான. எ-டு: செம்பாகம். 10. ஒரே யொழுங்கான. எ-டு: செந்தூக்கு. 11. கோட்டமில்லாத. எ-டு: செங்குத்து. 12. எண்ணிடைச் சொல் பெறாத. எ-டு: செவ்வெண். பருவியற் கருததினின்று நுண்ணியற் கருத்துத் தோன்றுவது போன்றே, நுண்ணியற் கருத்தினின்று பருவியற் கருத்துந் தோன்றும். குணத்தின் அல்லது நடத்தையின் நேர்மை நுண்ணியல்; கோலின் அல்லது உடம்பின் நேர்மை பருவியல். |