தென்னை இயற்கையாகத் தோன்றிய நிலம் குமரிநாடு. குமரிக் கண்டத் தென்பாக நாற்பத்தொன்பது நாடுகளுள் ஒரு பகுதி ஏழ்தெங்கநாடு. தென்னை தென்கோடியில் தோன்றியதனாலேயே, தென்றிசை அதனாற் பெயர் பெற்றது. தென்னுதல் - கோணுதல், சாய்தல். இயல்பாகக் கோணுவத னாலேயே முடத்தெங்கு என்னும் அடைமுதற்சொல் எழுந்தது. தென் - தென்னை. தென் - தென்கு - தெங்கு. தென் = தெற்கு. தென் + கு - தெற்கு. ஒ.நோ.: வடக்கு (வடம் + கு), கிழக்கு (கீழ் + கு), மேற்கு (மேல் + கு). தென்னைக்கு நெய்தல்நிலம் மிக ஏற்றதாதலால், நெய்தல் மிக்க சேரநாட்டில் தென்னை தொன்றுதொட்டுச் சிறப்பாகச் செழித்தோங்கி வளர்கின்றது. தீயர் (தீவார்) இலங்கையினின்று வந்தவரேனும், தென்னை குமரிநாட்டுத் தொடர்புடையது. அரிசி அல்லது நெல்லளக்கும் படி முதன்முதல் மூங்கிற் குழாயாலேயே அமைந்தது. நுள் - நள் - நாள் - நாளம் = உட்டுளை, உட்டுளைப் பொருள், தண்டு. நாளம் - நாளி = உட்டுளையுள்ள மூங்கில், புறக்காழது. நாளி - நாழி = மூங்கிற்படி, படி. “புறக்கா ழனவே புல்லென மொழிப” (மரபு. 86) என்னும் தொல்காப்பிய மரபியல் நூற்பாவால் தென்னையும் மூங்கிலொடு சேர்ந்து நாளியினமாம். வேந்தன் குடிப்பெயரினின்று அவன் நாட்டுப் பெயர் திரிவதுண்டு. எ-டு: பாண்டியன் - பாண்டியம் = பாண்டிநாடு. இம் முறைப்படி, சேரலன் - சேரலம், சேரன் - சேரம் என்று திரியும். தென்மொழிச் சகரம் வடமொழியிற் ககரமாகத் திரிவதால், சேரலம் - கேரள(ம்),சேரம் - கேர(ம்) என்றாம். ஆகவே, நாலிகேர என்பது, சேரநாட்டில் சிறப்பாக வளரும் மூங்கிலொத்த புறக்காழ்த் தென்னை என்று பொருள்படலாம். (வடமொழியிற் சொன்முறை மாறும்). நாலிகேர என்பது, தமிழில் நாளிகேரம் என்னும் வடிவே கொள்ளும். |