நலித்தல் = வருத்துதல். நலிவு = 1. துன்பம். “வையகத்து நலிவுகண்டு” (பு.வெ. 8 34, கொளு). 2. கேடு. “நோற்று நலிவிலா வுலக மெய்தல்” (சீவக. 2727). நுல் - நுள் - நொள். நொள் - நொள்ளா - நொள்ளாப்பு = வருத்தம். நொள் - நொய் - (நய்) - நை. நைதல் = மனம் வருந்துதல். நைகரம் = துன்பம். “நைகர மொழிந்து” (விநாயகபு. 57 18) நை = துன்பம். நைவருதல் = வருந்துதல். “நைவாரா வாயமக டோள்” (கலித். 103 66). நைவு = 1. வருந்துகை. 2.நோய். “நாளு நைவகன்ற” (தைலவ. தைல. பாயி. 1). நைநை யெனல் = குழந்தை விடாது அழுது தொந்தரவு செய்தல். நை - (நய்) - நசு - நசல் = நோய் (W.). நசலாளி = நோயாளி (W.). நசிறாண்டி - தொந்தரவு செய்வோன் (யாழ்ப்.). நசிறாளி - நசிறாணி = தொந்தரவு செய்பவன் (யாழ்ப்.). ஒ.நோ.: களவாளி - களவாணி. நசு - நசுவல் = தொந்தரவு செய்பவன் - வள் - து. நசுநசுத்தல் = தொந்தரவு செய்தல். நசுநசெனல் = தொந்தரவு செய்தற் குறிப்பு. நசு - நச்சு = 1. தொந்தரவு. நச்சுப் பிடித்தவன் (உ.வ.). 2. அலப்பல். நச்சுதல் = 1. தொந்தரவு செய்தல். 2. அலப்புதல். நச்சுவேலை (நச்சுப் பிடித்த வேலை) = தொந்தரவு உண்டாக்கும் வேலை. நச்சு - நச்சி = வீண் பேச்சுப் பேசித் தொந்தரவு செய்பவன். நச்சுநச்செனல் = தொந்தரவு செய்தற் குறிப்பு. நச்சுப் பிச்சு = 1. தொந்தரவு. 2. ஓயாது அலப்புகை. நொய் - (நொயி) - நொசி. நொசிதல் = வருந்துதல். |