நொசித்தல் = வருந்துதல். “நொசித்த வெம்முலை” (சீவக. 654). நொசி - நொசிவு = வருத்தம் (சூடா.). நொள் - நெள் (நெழு) - நெகு. நெகுதல் = 1. வருந்துதல். “இனிச்செயல் யாவதென வுள நெக்கார்” (காஞ்சிப்பு. கயிலா. 30). 2. கெடுதல். “மாறு படமலைந் தாய்ப்படை நெக்கது” (சீவக. 426). நொள் - நொது - நொந்து - நந்து - நந்தம் - நத்தம் = அழிந்துபோன வூரிடம், பாலைநிலத்தூர். பகைவரால் அழிக்கப்பட்டுப் பாழடைந்த ஊரிருந்த இடங்கள், இன்றும் நத்தப்பாழ் என்றும் நத்தத்து மேடு என்றும் சொல்லப்படும். நொள் - நோள் - நோளை = நோய்நிலை, நோளையுடம்பு (நோளைச் சரீரம்) (W.). நோள் - நோய் = 1. நோவு. 2. பிணி. “நோயிகந்து நோக்கு விளங்க” (மதுரைக். 13). 3. துன்பம். “அதிர வருவதோர் நோய்” (குறள். 429). 4. துயரம் (பிங்.). 5. அச்சம். “நோயுடை நுடங்குசூர்” (பரிபா. 5 4). 6. குற்றம். “பகலென்னும் பண்பின்மை பாரிக்கு நோய்” (குறள். 851). ம. நோயி. நோயாளி = பிணியாளி. நோய்தல் = 1. நோயால் மெலிதல். 2. பயிர் நோயால் வாடுதல். நோய்த்தல் = 1. நோயால் வருந்துதல். 2. நோயால் மெலிதல். 3. பயிர் நோயால் வாடுதல். 4. நிலம் உரமற்றுப் போதல். நோய்த்தல் - நோய்ச்சல் = நோய்ப்படுகை. நோய்த்தல் - நோய்ஞ்சல் - நோயால் மெலிதல். நோய்ஞ்சல் - நோஞ்சல் = மெலிவு. நோய்ஞ்சல் - நோய்ஞ்சலன் = நோயாளி. நோய்ந்தான் - நோய்ஞ்சான் - நோஞ்சான் = நோயால் மெலிந்தவன். நோய்ஞ்சி = நோயாளி. நோய்ஞ்சி - நோய்ஞ்சியன் = நோயாளி. நோய்ஞ்சி - நோஞ்சி. நோய்முகன் = துன்பஞ் செய்யும் காரி (சனி). (தைலவ. தைல.). |