“நீயிர் நீவிர் நான் எழுவா யலபெறா” (நன். 264) என்னும் நூற்பாவில், நீர் என்பதையுஞ் சேர்த்துக்கொள்ளாமை நன்னூ லாரின் மொழியாராய்ச்சி யின்மையையே காட்டும். (3) முன்மை (காலமும் இடமும்) ஊங்கு = முன்பு. (உங்கண் - ஊங்கணோர் = முன்னோர்). புரம் = முன். முகம் = முன்பு, காரணம். முகம் - முகர் - முகரி = தொடக்கம். முதல் - முன், தொடக்கம். அடி, காரணம். (முதலி = முதலிலுள்ளவன் - ள் - து.) முந்து - முந்தை - முத்தை. (முந்துரி - முந்திரி = முதற் சிற்றிலக்கம்) முன் - முன்னம் - முனம். முன்னம் - முன்னர். முன் - முன்பு. முன் - முன்று. முன் - முனை - முனைவன் = முன்னோன், கடவுள். முன்மையைக் குறிக்குஞ் சொற்கள், முன்வாயான உதட்டிற் பிறக்கும் பகர மகர முதலவாயிருப்பது கவனிக்கத் தக்கது. (4) முதன்மை முன்னிடத்தில் வைக்கப்பெறுவது சிறந்த பொருளாதலால், முன்மைக் கருத்தில் முதன்மைக்கருத்துத் தோன்றிற்று. முகம் = தலைமை. முகம் - முகமை - முகாமை. முகம் - முகர் - முகரி = தலைமை. முகம் - முகன் - முகனை = தலைமை. முகு - முக்கு - முக்கியம் (வ.) முதல் - முதன்மை. முதன் - முதலி = தலைவன், படைத் தலைவன். படைமுதலி சேனைமுதலி என்பன படைத்தலைவன் பெயர். முதலியார் = படைத்தலைவர் வழியினர். (5) முதுமை முன் பிறந்தவன் பின் பிறந்தவனை நோக்க முதியவனாதலால், முன்மைக் கருத்தில் முதுமைக் கருத்துத் தோன்றிற்று. துய்ப்பு (அனுபவ) மிகுதியால் அறிவு வளர்தலின் முதுமைப் பெயர் அறிவையும் குறிக்கும். |