பக்கம் எண் :

ஆனந்த வருஷத்து அதிர்ஷ்டக் குழந்தை

31


தகுதியில்லாதவன்” என்று திட்டினார். அத்துடன் பள்ளிக்கு மகனை அனுப்புவதையும்
நிறுத்திவிட்டார்.

     ஆனாலும், சாமா சங்கீத ஆசையை விடவில்லை. யாரேனும் அழகாகப் பாடினால்,
ஆவலோடு கேட்டுக் கொண்டேயிருப்பார். அப்படியே திருப்பிப் பாடியும் காட்டுவார்.

     ஒரு சமயம், உறவினர் ஒருவர் வீட்டில் உபநயனம் நடந்தது. சாமாவும் அவருடைய
தந்தையும் அங்கே சென்றிருந்தார்கள். அப்போது ஒரு சங்கீத வித்துவான் நந்தனார்
சரித்திரத்திலிருந்து சில கீர்த்தனங்களைப் பாடினார். கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய
நந்தனார் சரித்திரக் கீர்த்தனங்களை அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும்
பாடுவார்கள். அன்று அந்த வித்துவான் பாடிய கீர்த்தனங்களில் ஒன்று சாமாவுக்கு மிகவும்
பிடித்தது.

     தீயினில் மூழ்கினார் - திருநாளைப் போவார்
     தீயினில் மூழ்கினார்.

என்ற கீர்த்தனம்தான் அது. அதை நன்றாக மனத்தில் வாங்கிக் கொண்டார்.

     கச்சேரி முடிந்த பிறகு, சாமா அதே கீர்த்தனத்தை அங்கு வந்திருந்த
உறவினர்களிடம் பாடிக் காட்டினார். ஆனால், அப்போது அவருடைய தந்தை அங்கே
இல்லை. எங்கோ வெளியில் சென்றிருந்தார்.

     சாமாவின் பாட்டைக் கேட்டவர்கள், “ஆஹா ! மிகவும் நன்றாக யிருக்கிறது.
இன்னொரு தடவை பாடு. இன்னொரு தடவை பாடு” என்று மீண்டும் மீண்டும் பாடச்
சொல்லிக் கேட்டார்கள்.