சாமா உற்சாகமாகப் பாடிக்கொண்டேயிருந்தார். அந்தச் சமயம் பார்த்து, வெளியில் சென்றிருந்த தந்தை திரும்பி வந்தார். வந்தவர், ‘யாரது இவ்வளவு இனிமையாகப் பாடுவது?’ என்று நினைத்துக் கொண்டே உள்ளே எட்டிப் பார்த்தார். பார்த்தவர், ‘அடடே, நம் சாமாவா’ என்று வியப்படைந்தார்.
சிறிது நேரம் மறைந்திருந்தபடியே பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு, சாமாவின் எதிரிலே வந்தார். தந்தையைக் கண்டதும் பாட்டு நின்று விட்டது ! ஆனால், தந்தையோ, “ஏன் நிறுத்தி விட்டாய்? பயப்படாமல் பாடு. உனக்கும் நன்றாகச் சங்கீதம் வரும்போல் தெரிகிறது” என்றார்.
சாமாவுக்கு மீண்டும் சங்கீதமும், தமிழும் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற ஆசை அவருக்கு அதிகமாயிற்று. * * *
சாமாவுக்குத் தமிழ் படிப்பதிலே ஆர்வம் அதிகமாயிருந்தது. அவர் பல புலவர்களிடம் தமிழ் படித்தார். கடைசியாக, அவருக்கு மிகப் பெரிய அறிஞர் ஒருவர் ஆசிரியராகக் கிடைத்தார். ‘மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை’ என்றால் ‘அடேயப்பா ! அவர் பெரிய புலவரல்லவா ! சிறந்த கவிஞரல்லவா !’ என்று அந்தக் காலத்தில் எல்லோரும் வியந்து பாராட்டுவார்கள். அப்படிப்பட்ட பெரியவரிடம்தான் சாமா படித்து வந்தார்.
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுக்கு நல்ல பேரும் புகழும் இருந்தும், வறுமையால் அவர் அடிக்கடி |