அன்று வகுப்புப் பரீட்சை நடக்கவேண்டிய நாள். மாணவர்கள் ஒரேயடியாகக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது, சாமிநாதய்யர் ஒரு மாணவனைப் பார்த்து, “ஏன் இப்படிச் சத்தம் போடுகிறீர்கள்?” என்று கேட்டார்.
உடனே அந்த மாணவன், “இங்கே இப்படித்தான் நடக்கும். இது கும்பகோணமில்லை” என்று குத்தலாகப் பதில் சொன்னான்.
சாமிநாதய்யர் அவனுடைய பதிலைக் கேட்டுக் கோபப்படவில்லை. ‘சரி, இப்போது இவர்களிடம் பேசுவதில் பயனில்லை’ என்று நினைத்துச் சும்மா இருந்துவிட்டார். ஆனாலும், அவருக்கு ஒரு நம்பிக்கை மட்டும் இருந்தது. ‘இதையும் ஒரு காலத்தில் கும்பகோணம் போல் ஆக்கிவிடலாம்’ என்பதுதான் அந்த நம்பிக்கை.
அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. மாணவர்கள் விரைவிலே அவருடைய பெருமையை அறிந்து கொண்டார்கள். தகுந்த மரியாதை செலுத்தத் தொடங்கினார்கள். * * * எவனாவது ஒரு மாணவன் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டால், அவர் நேரடியாக அவனைக் கண்டிக்க மாட்டார். வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மறைமுகமாகப் பேசி அவனைத் திருத்தி விடுவார்.
ஒருநாள், வகுப்பில் தமிழ்ப் பாடம் நடந்து கொண்டிருந்தது. முதல் வரிசையில் இருந்த மாணவன், |