‘கல்வியில் சிறந்தவர், காலமெல்லாம் நாட்டுக்கு உழைத்தவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக இணையில்லாத தொண்டு புரிந்தவர், இந்தியாவிற்கு விடுதலை வாங்கித் தந்த மாபெரும் தலைவர்களில் ஒருவர்’ என்று அனைவரும் போற்றும் அற்புத மனிதராகவே அவன் விளங்கினான். இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும். பாரத தேசத்தில் பத்தாண்டுகள் கல்வி மந்திரியாயிருந்த அபுல்கலாம் ஆஸாத் அவர்களே இக்கட்டுரையின் கதாநாயகர்.
* * * ஆஸாத் மிகவும் சிறு பையனாக இருக்கும்போதே, மிகுந்த புத்திசாலியாக இருந்தார். எந்த விஷயத்தையும் சுலபமாகப் புரிந்து கொண்டு விடுவார்.
எஸ்.எஸ்.எல்.ஸி. பாடத் திட்டம் என்று சொல்கிறோமே. அதேபோல் அரபியில் ஒரு பாடத் திட்டம் உண்டு. அதற்கு ‘தர்ஸே நிஜாமி’ என்று பெயர். சரித்திரம், பூகோளம், கணிதம், தர்க்கம், தத்துவம் முதலியவை யாவும் அந்தத் திட்டத்தில் அடங்கியுள்ளன. அந்தத் திட்டத்தை நன்றாகப் படித்துத் தேர்ச்சிபெற வேண்டுமானால், கெட்டிக்கார மாணவனுக்குப் பத்து வருஷங்கள் ஆகும் ; சாதாரண மாணவனுக்குப் பதினான்கு வருஷங்கள் ஆகும். ஆனால், நம் ஆஸாத் எத்தனை வருஷங்களில் அதைப் பூர்த்தி செய்தார், தெரியுமா? நான்கே நான்கு ஆண்டுகளில்தான் ! பத்து வயதில் ஆரம்பித்துப் பதினான்காவது வயதில் அந்தத் திட்டத்தை முடித்து விட்டார் ! |