பக்கம் எண் :

பதினான்கு வயதில் பத்திரிகாசிரியர்

41


      உடனே, பதினான்கு வயதுப் பையன் ஒருவன் எழுந்து மேடைமீது வந்தான்.
அவனைப் பார்த்தவுடன் எல்லோருக்குமே வியப்பாக இருந்தது. “என்ன !  இந்தப்
பையனா அந்த ஆசிரியர் ! இருக்கவே இருக்காது” என்று சிலர் நினைத்தனர்.

     “ஒருவேளை இவன் அந்த ஆசிரியரின் மகனாக இருக்கலாம். அவர்
வரமுடியவில்லை போலிருக்கிறது ;  இவனை அனுப்பி வைத்திருக்கிறார்” என்று வேறு
சிலர் நினைத்தனர்.

     இப்படிப் பலரும் பல விதமாக நினைத்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பையன்
சிறிதும் கூச்சமில்லாமல் தலையை நிமிர்த்தித் தைரியமாகப் பேச ஆரம்பித்தான். அவன்
பேச எடுத்துக் கொண்ட விஷயமோ மிகவும் சிக்கலான விஷயம். ஆனால், அவன்
கொஞ்சமும் சிக்கலில்லாமல், எவரும் புரிந்து கொள்ளும் முறையில் அற்புதமாகப்
பேசலானான் ;  ஆழ்ந்த கருத்துக்களை எடுத்துக் கூறினான்.

     கங்கை நதி போலத் தங்குதடையின்றிப் பொங்கி வழியும் அவனுடைய பேச்சைக்
கேட்கக் கேட்க எல்லோருக்கும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ‘உண்மையில்
இவனாகத்தான் பேசுகிறானா ;  அல்லது இதில் மாயாஜாலம், மந்திரஜாலம் ஏதேனும்
இருக்குமா !’  என்றுகூடச் சிலர் சந்தேகப்பட்டனர். அவ்வளவு சிறப்பாக அவன்
பேசினான் ! 

     இப்படிப் பதினான்காவது வயதிலே சிறந்த பத்திரிகாசிரியனாகவும், சிறந்த
பேச்சாளனாகவும் விளங்கிய அந்தப் பையன், பிற்காலத்தில் சாதாரண மனிதனாகவா
இருந்திருப்பான்?