பக்கம் எண் :

காற்றாடியால் காயம் பட்டவர்

53


       “ஏ காற்றாடியே, உச்சிக் கிளையிலா உட்கார்ந்திருக்கிறாய்? அவர்களை
ஏமாற்றியது போல், என்னையும் ஏமாற்ற முடியாது. இதோ உன்னிடம் ஏறி வருகிறேன்”
என்று கூறிவிட்டு, அந்தக் கொன்றை மரத்தில் ஏறினான். ஒவ்வொரு கிளையாகப் பிடித்து
ஏறி, உச்சிக் கிளைக்குச் சென்றுவிட்டான். அவன் மிகவும் சிறுவனாக இருந்ததால் கிளைகள்
முறியவில்லை ;  அதிகமாக வளையவும் இல்லை.

     காற்றாடியின் அருகிலே அவன் சென்றுவிட்டான். இன்னும் ஒரு விநாடியில் காற்றாடி
அவன் கைக்கு வந்துவிடும். ஆனால்...

     என்ன ஆனால்?

     எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. எதிர்பாராத விதமாக அப்போது ஒரு குரல் வந்து
காரியத்தைக் கெடுத்துவிட்டது ! 

     ‘டேய், டேய் !’  என்ற அந்தக் குரலைக் கேட்டதும், ‘ஐயோ, அம்மா
பார்த்துவிட்டாளே !’  என்று அவன் நினைத்தான். உடனே அவன் கைகால்கள் நடுங்கின.
பிடித்திருந்த கிளையை விட்டுவிட்டான் ! 

    அப்புறம்...?

     கிளையை விட்டால் என்ன ஆகும்? தலைகீழாகத் ‘தொப்’பென்று விழுந்தான்.
விழும்போது, முறிந்திருந்த ஒரு கிளையின் கூரான பாகம் அவனுடைய இடது விலாப்
பக்கத்தில் பாய்ந்து விட்டது. உடனே, அங்கிருந்து ‘குபுகுபு’ என்று இரத்தம் பீறிட்டுக்
கொண்டு வந்தது. “ஐயோ ! அம்மா !” என்று அவன் வீறிட்டு அழுதான். அழுத குரல்
கேட்டு அம்மா ஓடோடி வந்தாள். இரத்த வெள்ளத்தில் மகன்