ஒரு ரூபாய் ஊழியர் | 9 | எல்லாவற்றையும் கூட்டிப் போட்டு, மொத்தத் தொகையைச் சொன்னார்கள். அவர்கள் சொன்ன தொகையும், முத்துசாமி சொன்ன தொகையும், ஒன்றாகவே இருந்தன. தம்படிகூட வித்தியாசமில்லை! இதைக் கண்டு தாசில்தார் மிகுந்த வியப்படைந்தார். அவர் மட்டும் தானா? மிராசுதார், கணக்குப் பிள்ளைகள் எல்லாருமே அளவில்லாத ஆச்சரியமடைந்தார்கள்.
முத்துசாமியிடம் இப்படிப்பட்ட திறமையும், ஞாபக சக்தியும் இருப்பதைக் கண்ட தாசில்தார் வியப்படைந்ததோடு நிற்கவில்லை. அன்றே முத்துசாமியை அழைத்து, “முத்துசாமி, இன்று முதல் உன் சம்பளத்தை மூன்று மடங்கு ஆக்கி விட்டேன்” என்று கூறினார்.
மூன்று மடங்கு! அப்படியானால் முத்துசாமிக்கு மாதம் எவ்வளவு கிடைத்திருக்கும்?
120 ரூபாயாக இருக்குமா?
இல்லை.
90 ரூபாயாக இருக்குமா?
அதுவும் இல்லை.
60 ரூபாய்...?
அது கூட இல்லை.
அப்படியானால், 30 ரூபாயாகத்தான் இருக்க வேண்டும். |
|
|
|
|