பக்கம் எண் :

200கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

பாண்டியன்:(கணியரை நோக்கி)
நலமுரை கணியீர் நாவசைத் திலீர்நும்
உளமெது கருதினும் உடன்வாய் மலர்க
கணியன்:பாண்டிய நாட்டில் வேண்டிய பெறுதலின்
ஈண்டொரு குறையிலை எனினும் . . . .
பாண்டியன்:. . . . . . . . . எனினும்
கருதிய துரையின் கணியர் நும்மொழி
விரைவில் நிறைவுறும் விளம்புக விளம்புக;
கணியன்:கலங்கேல் மன்னவ காவலன் நலமும்
நலங்கெழு கோவில் நலமுங் கருதினென்;
பாண்டியன்:ஓதுமின் ஓதுமின் வேதியர் பெரும
யாதுநும் முளமென அறியும் விழைவினம்;
கணியன்:முக்கட் செல்வன் முதுபெருங் கோவிலும்
தெற்கின் மேய செவ்வேள் குன்றும்
வடபால் மேய மாலிருஞ் சோலையும்
வடமொழி யோதி வழிபடின் நன்றாம்
இடமகல் நம்நா டேற்றமும் எய்துமால்;
நாகனார்:தென்மொழி யிசைப்பின் தீங்கு வருங்கொல்?
கணியன்:நன்மொழி புகன்றீர்; நானது கருதேன்
தேவ மொழியெனச் செப்பும் இதனைத்
தேவர் உவப்பர் . . . . . . .
நாகணார்:. . . . . . . . திருமறை வல்லீர்
ஒருமொழி தேவன் உவப்ப னாமெனில்
அறிவிற் சிறந்தோர் அச்சொல் ஏலார்;
பிறமொழி வெறுப்பன் இறைவன் என்ப
தறமும் அன்றே; அறிவும் அன்றே
சீனர் யவனர் சிங்களர் சாவகர்
சோனகர் முதலோர் கோநகர் ஈண்டு
வாணிகப் பொருட்டா வைகினர் ஈண்டி;