பக்கம் எண் :

இளம்பெருவழுதி201

  பேணி அவர்தொழூஉம் பெரும்பெயர்க் கடவுளர்
திருச்செவி மாந்தித் திளைப்ப தெம்மொழி?
திருத்தகும் அம்மொழி தேவ மொழியோ?
எந்நாட் டுறையும் இறைவர் அவரவர்
அந்நாட் டம்மொழி அகமுற உவப்பர்
தென்னா டுடையன் தென்மொழி வெறுப்பனோ?
கணியன்:மன்னன் வாழ்வில் மறுமைப் பயனும்
மன்னுதல் வேண்டி வடமொழி யதனை
ஒதுக என்றனென் உறுபிழை யுளதோ?
நோதகு மொழிகள் நுவலேல் புலவ;
நாகனார்:மறைபுகழ் மொழிகள் மறுவற வுணர்ந்த
நிறைமதி யுடையீர் நெடுமொழி கருதிலேன்;
செந்தமிழ் வளர்க்கும் சீர்சால் வேந்தன்
முந்தையர் சங்கம் மொய்ம்புறக் கண்டு
தாய்மொழி ஆய்ந்தனர் தமிழ்மொழி ஓதினர்
தீய நிரயத்துச் சென்றோ வீழ்ந்தனர்?
இம்மைச் செய்தன மறுமைக் காமென
இம்மைக் குரியன இழப்பது நன்றோ?
இருப்பது மறுத்தலும் வருவது புகுத்தலும்
வெறுப்புறு செயலாம்; விழைவதும் நன்றோ?
கணியன்:மடமைகள் அகற்றும் மாபெரும் புலவீர்
கடவுள் மறுப்பினை யாங்ஙனம் கற்றீர்?
நாகனார்:(நகைத்துக் கொண்டே)
நேர்மை, வாய்மை, நிறைகோ லன்ன
சீர்மை, உரிமை, செந்தமிழ்த் தூய்மை,
இவ்வெலாம் கடவுள் மறுப்பென நுங்கள்
செவ்விய மறைகள் செப்பின கொல்லோ?
தகாப்பழி கூறித் தாய்மொழிப் பற்றை
நகாஅ தொழிமின் நான்மறைப் பெரியீர்!
இடுதே ளிட்டென எம்மேற் பழியிடல்
வடுவாம் நுமக்கு; வாய்மை மொழிமின்;