பக்கம் எண் :

54மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

தொட்ட வெம்படை வீரன் வெற்றி
     புனைந்த சுந்தர மாறன்முன்
சூழி விட்ட தெலிங்கர் சேனை
     துணித்து வென்ற களத்துமேல்

விட்ட வெம்பரி பட்ட பொழுதெழு
     சோரி வாரியை யொக்குநீர்
மேல் மிதந்த நிணப் பெருந்திரள்
     வெண் ணுரைத்திர ளொக்குமுன்

பட்ட வெங்கரி யந்த வீரர்
     படிந்த மாமுகி லொக்கும்வீழ்
பருமணிக் குடை யங்கு வந்தெழு
    பருதி மண்டல மொக்குமே.

குறிப்பு :- சுந்தர மாறன் - சுந்தர பாண்டியன். இவன் தெலிங்க ருடன் செய்த போர்க்களத்தின் வர்ணனை இச் செய்யுள். குதிரைப் படை சிந்திய இரத்தம் கடலையொத்தது. நிணப்பெருந்திரள் இரத்தக் கடலில் தோன்றும் நுரை போன்றன. போரில் இறந்த யானைகள், கடல்நீரைப் பருகும் மேகம் போன்றிருந்தன. தோற்றோடிய அரசன் போட்டுச் சென்ற வெண்கொற்றைக் குடை, கடலிலிருந்து தோன்றுகிற சூரியனைப் போன்றிருந்தது என்பது கருத்து.

சுந்தர பாண்டியன்

இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவில் கிழக்குக் கோபுர வாயிலுக்குள் வலதுபுறச் சுவரில் உள்ளது.

பதிப்பு : எண் 620. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No.620. S.I.I. Vol. IV.)

விளக்கம் : சுந்தரபாண்டியன் என்னும் பாண்டிய அரசன், தில்லைச் சிற்றம்பலத்தில் துலாபாரம் ஏறித் தன் எடைக்குச் சரியாக பொன்னையும் முத்தையும் நிறுத்துத் தானம் செய்ததை இச்செய்யுள் கூறுகிறது. முதல் அடியில் இரண்டு எழுத்துக்கள் மறைந்துவிட்டன.