பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்157

என்றுதா னுலகுய்யக்கோ ளெண்ணினா னதுமுதலாச்
சென்றிரந் தார்க்கீந்தனன் பொருளுடம் புறுப்புக
டுன்றினன் பிறக்குந னுளனாயின் மாமேருக்
குன்றியின் றுணையாகக் கொடுத்திட்டா னல்லனோ.     1

எண்ணிகந்த காலங்க ளெம்பொருட்டான் மிகவுழந்து
மெண்ணிகந்த வுலோகங்க ளிருடீர வொருங்குணர்ந்து
மெண்ணிகந்த தானமுஞ் சீலமு மிவையாக்கி
யெண்ணிகந்த குணத்தினா னெம்பெருமா னல்லனோ.     2

திருப்பதிகம் என்னும் இந்நூலைப் பற்றியும், இதன் ஆசிரியரைப் பற்றியும் வேறு செய்திகள் தெரியவில்லை.

41. திருப்பாலைப்பந்தல் மத்தியஸ்தநாத சுவாமி உலா

இந்த உலாவைப் பாடியவர் காளிங்கராயர் உண்ணாமுலை நயினார் எல்லப்ப நயினார் என்பவர். இவரே அருணகிரிப் புராணம் பாடியவர். இவர் இயற்றிய இந்த உலா மறைந்து போயிற்று.11 இந்த உலாவைப் பாடியதற்காக இவருக்குக் கோயில் அதிகாரிகள் நிலமும் வீடும் உணவும் நன்கொடையாக அளித்தனர்.

திருப்பாலைப்பந்தல் என்பது தென் ஆர்க்காட்டு மாவட்டம், திருக்கோவிலூர்த் தாலுகாவில் உள்ளது. இந்தப் புலவர் தஞ்சாவூரைக்
கி. பி. 1572இல் அரசாண்ட செல்லப்ப நாயகரின் அவைப் புலவராக இருந்தவர்.12

42. திருமேற்றளிப் புராணம்

இப்புராணத்தையும் இரேவண சித்தர் பாடினார். இவரது காலம் கி. பி. 16ஆம் நூற்றாண்டு. இவர் இவற்றிய பட்டீச்சுரப் புராணம் மறைந்து விட்டதுபோலவே, இப்புராணமும் மறைந்துவிட்டது.

43.திருவலஞ்சுழிப் புராணம்

ட்டீச்சுரப் புராணம், திருமேற்றளிப் புராணம் பாடிய இரேவண சித்தரே திருவலஞ்சுழிப் புராணத்தையும் பாடினார். இவரது காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு. இவரது மற்ற நூல்கள் மறைந்துவிட்டதுபோலவே இந்தநூலும் மறைந்துவிட்டது. இவர் இயற்றிய அகராதி நிகண்டு மட்டும் கிடைத்திருக்கிறது.