பக்கம் எண் :

158மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

44. திரையக்காணம்

இது ஒரு சோதிட நூல் என்று தெரிகிறது. யாப்பருங்கல உரை யாசிரியர் இந்நூலைக் குறிப்பிடுகிறார். (யாப்பருங்கலம், ஒழியியல், 2ஆம் சூத்திர உரை) இந்நூலிலிருந்து கீழ்க்காணும் இரண்டு செய்யுள்களை உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்:

“பூமன் றெறுகதிரோன் பொன்காரி யொண்புகரோன்
வாமப் புதன்வெளியோன் மாமந்தன்-சோமன்சேய்
சந்திரனே செவ்வாய் சதமகன்றன் மந்திரியே
யந்திரையைக் காணமாள் வார்.”     1

“ஆடரிவி லாகிநடு வந்தமுறை
     சேயிரவி யம்பொ னியலும்
சேடிசுற வேறுசனி வெள்ளிபுத
     னள்ளுமெறி தேள்வ லவன்மீ
னோடுமுயல் திங்களினொ டங்கிகுரு
     வுண்டலுணர் நண்டு துலைநீர்
மூடுகுட மோடுபுகர் காரிபுத
     னேரிதனை யுண்ணு முறையே.”     2

“இவையு முய்த்துணர் நிரனிறை. இவ்விரண்டுந் திரையக் காணம். ஓரிராசி மும்மூன்றாக ஒட்டிக்கொள்க” என்று உரையாசிரியர் எழுதுகிறார்.

இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

45. துரியோதனன் கலம்பகம்

டாக்டர் உ. வே. சாமிநாதையர் பதிப்பித்த தக்கயாகப் பரணி 615 ஆம் தாழிசை, விசேடக் குறிப்புரையில், துரியோதனன் கலம்பகத்தி லிருந்து ஒரு செய்யுள் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. அச்செய்யுள்:

“விடாது விழுங்குவெண் டிங்களை யெங்களை வெண்ணிலாவாற்
சுடாஅ விடில்விடுந் தொல்புவி வட்டமும் சூழ்கடலும்
வடாதுந் தெனாதும் வலம்புரித் தாருமை தோய்வரையுங்
குடாதுங் குணாது முடையான் கொடிமைக் கோளரவே?

இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.