மறைந்துபோன தமிழ் நூல்கள் | 177 |
7. பஞ்சமரபு இஃதோர் இசைத்தமிழ் நூல். அறிவனார் என்பவர் இந் நூலாசிரியர். “அறிவனார் செய்த பஞ்சமரபு” என்று அடியார்க்குநல்லார் சிலப்பதிகார உரைச்சிறப்புப் பாயிரத்தில் கூறுகிறார். இந்நூலினின்று ஒரு சூத்திரத்தை அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டுகிறார்: “இன்னும் சுத்தம் சாளகம் தமிழென்னும் சாதி யோசைகள் மூன்றினுடனும் கிரியைக (தாளங்கள்)ளுடனும் பொருந்தும் இசைப் பாக்கள் ஒன்பதுவகை யென்ப. அவை: சிந்து, திரிபதை, சவலை, சமபாத விருத்தம், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவ பாணி, சிறுதேவ பாணி, வண்ணமென விவை. என்னை? ‘செப்பரிய சிந்து திரிபதை சீர்ச்சவலை தப்பொன்று மில்லாச் சமபாத - மெய்ப்படியுஞ் செந்துறை வெண்டுறை தேவபாணி வண்ணமென்ப பைந்தொடியா யின்னிசையின் பா’ என்றார் பஞ்சமரபுடைய அறிவனாரென்னு மாசிரிய ரென்க” (சிலம்பு, கடலாடுகாதை, அடியார்க்குநல்லார் உரை) 8. பதினாறு படலம் பதினாறு படலம் என்னும் பெயருள்ள இசைத்தமிழ் நூல் ஒன்று இருந்தது என்பது, சிலப்பதிகார அரும்பத உரையாசிரியரின் உரையிலிருந்து தெரிகிறது. பதினாறு படலம் பல ஒத்துகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிகிறது. “தெருட்ட லென்றது செப்புங் காலை யுருட்டி வருவ தொன்றே மற்ற வொன்றன் பாட்டு மடையொன்ற நோக்கின் வல்லோ ராய்ந்த நூலே யாயினும் வல்லோர் பயிற்றுங் கட்டுரை யாயினும் பாட்டொழிந் துலகினி லொழிந்த செய்கையும் வேட்டது கொண்டு விதியுற நாடி என வரும். இவை இசைத்தமிழ்ப் பதினாறு படலத்துள் கரணவோத்துட் காண்க.” (சிலம்பு, கானல்வரி, அரும்பத உரையாசிரியர் உரை மேற்கோள்) |