பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்107

இரண்டாம் அங்கம்

முதற் களம்

இடம் :அரண்மனை.
காலம் :வைகறை.

(ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை)

(நேரிசை ஆசிரியப்பா)

ஜீவகன்: சொல்லிய தெல்லாஞ் சுந்தர முனிவரே!
புருடோத் தமனெனும் பொறையனே நமக்கு
மருமா னாக மதித்ததும் அவரே;
என்றுங் குழந்தை யன்றே; மன்றல்
 5விரைவில் ஆற்ற வேண்டும்; நாம் இது
வரையும் மறதியா யிருந்தது தவறே
யாம் இனித் தாமத மின்றியிம் மணமே
கருமமாய்க் கருதி முடிப்பாம்;
வருமுன் கருதும் மந்திர வமைச்சே!     1
குடிலன்: 10இறைவ! இதுகேட் டெனக்குள இன்பம்
அறைவதெப் படியான்? அநேக நாளாப்
பலமுறை நினைத்த துண்டிப் பரிசே;
நலமுறப் புரிசை நன்கு முடியும்
அற்றம் நோக்கி யிருந்தே னன்றிச்
 15சற்றும் மறந்தே னன்று; தனியே
கட்டளை பிறந்துங் கடிமணந் தன்னை
விட்டுள தோஇனி வேறொரு காரியம்?
புருடோத் தமனெனும் பொருநைத் துறைவன்
காண்டகும் ஆண்டகை யென்றும், ஞானம்


பொறையன் - சேர அரசன். ஆற்ற - செய்ய. மருமான் - மருமகன். மந்திரம் - சூழ்ச்சி, ஆலோசனை. அறைவது - சொல்லுவது. இப்பரிசு - இவ்விதம், இப்படி. அற்றம் - காலம். பொருநை - சேர நாட்டில் உள்ள ஒரு ஆறு. பொருநைத் துறைவன் - சேர அரசன்.