பக்கம் எண் :

110மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

   எங்குஞ் சூழ்ச்சித் துணைவர்.
பங்கமி லுபாயம் என்கொல்? பகரே.      7
குடி: 75வஞ்சிநா டதனில் நன்செய் நாடெனச்
செந்தமிழ் வழங்குந் தேயமொன் றுளது. அதன்
அந்தமில் பெருவளம் அறியார் யாரே?
மருதமும் நெய்தலும் மயங்கியங் கெங்கும்
புரையரு செல்வம் நிலைபெற வளரும்;
 80மழலைவண் டானம் புலர்மீன் கவர,
ஓம்புபு நுளைச்சியர் எறிகுழை, தேன்பொழி
புன்னைநுண் தாதாற் பொன்னிறம் பெற்ற
எருமையின் புறத்திருந் திருஞ்சிறை புலர்த்தும்
அலைகடற் காக்கைக் கலக்கண் விளைக்கும்;
 85கேதகை மலர்நிழல் இனமெனக் கருதித்
தாராத் தழுவிடச் சார்தரச் சிரித்த
ஆம்பல்வாய் கொட்டிடும் கோங்கலர்த் தாதே;


பங்கம்இல் - குற்றம் இல்லாத. வஞ்சிநாடு - வஞ்சி நகரத்தைத் தலைநகரமாகக் கொண்ட சேரநாடு. நன்செய் நாடு - நாஞ்சில் நாடு. செழிப்பான நன்செய் நிலம் உடையது பற்றி நாஞ்சில் நாடு எனப் பெயர் பெற்றுள்ளது. (நாஞ்சில் - ஏர்.) (75 முதல் 144-ஆம் வரி வரையில் நாஞ்சில் நாட்டை நூலாசிரியர் குடிலன் என்னும் நாடக உறுப்பினன் வாயிலாகப் புகழ்ந்து பேசுகிறார்.)

அந்தம் இல் - முடிவு இல்லாத மருதம் - வயல் சூழ்ந்த இடம். நெய்தல் - கடல் சார்ந்த இடம். மயங்கி - கலந்து. வண்டானம் - நாரை. புலர்மீன் - நெய்தல் நில மக்கள் மணலில் உலர்த்தும் மீன். ஓம்புபு - காக்க. நுளைச்சியர் - பரதவ சாதிப் பெண்கள். இருஞ்சிறை - நீண்ட சிறகுகளை. புலர்த்தும் - உலர்த்துகின்ற. அலக்கண் - துன்பம். கேதகை - தாழை. தாரா - வாத்து.

(வரி 85 - 87) நீரோடையின் கரையில் வளர்ந்த தாழைப் புதரில் பூத்த தாழம்பூவின் நிழல், தண்ணீரில் வாத்தின் உருவம் போலத் தோன்ற, அதுகண்ட தாரா அதனைத் தழுவிற்று. தாராவின் அறியாமையைக் கண்ட ஆம்பல் வாய்திறந்து சிரித்தது. சிரித்தபோது அதன் உள்ளிருந்த பூந்துகள் சிந்தின.