பக்கம் எண் :

332மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

நாரா: இட்டநின் கட்டளைப் படியே எய்தினர்.
ஜீவ: (நாராயணனை நோக்கி)
 175மற்றிவர் கவலை மாற்றிட ஒருபா
சற்றிசைத் திடுவளோ வாணி? சாற்றுதி!
வாணி:  (பாட)

(கொச்சகக் கலிப்பா)

நீர்நிலையின் முதலையின்வாய் நிலைகுலைந்த ஒருகரிமுன்
ஓர் முறையுன் பெயர் விளிக்க உதவினைவந் தெனவுரைப்பர்;
ஆர்துயர அளக்கர்விழும் அறிவிலியான் அழைப்பதற்குன்
பேர்தெரியேன் ஆயிடினும் பிறகிடல்நின் பெருந்தகையோ.     1
பாரரசர் துகிலுரியப் பரிதவிக்கும் ஒருதெரிவை
சீர்துவரை நகர்கருதிச் சிதைவொழிந்தாள் எனஉரைப்பர்;
ஆர்துணையும் அறவிருக்கும் அறிவிலியான் அழைப்பதற்குன்
ஊர்தெரியேன் ஆயிடினும் உறுதிதரல் உனக்குரித்தே.     2
மறலிவர மனம்பதறும் மார்க்கண்டன் உனதிலிங்கக்
குறிதழுவி அழிவில்வரம் கொண்டான்முன் எனவுரைப்பர்;
வெறிகழுமிப் பொறியழியும் வெம்பாவி விரவுதற்குன்
நெறியறியேன் ஆயிடினும் நேர்நிற்றல் நினதருளே.     3


கொச்சகக் கலிப்பா - 1. துயர அளக்கர் - துன்பமாகிய கடல். பிறகிடல் - பின் வாங்குதல். இதில் கஜேந்திர மோக்ஷக் கதை கூறப்படுகிறது (புராணக் கதை விளக்கத்தில் காண்க).

2. அரசன் - துரியோதனாதியர். ஒரு தெரிவை - திரெபதி. துவரைநகர் - துவாரகை, கண்ணபிரானுடைய நகரம். சிதைவு. அழிவு. இதில் திரௌபதியின் துகிலுரிதல் கதை கூறப்படுகிறது (புராணக்கதை விளக்கத்தில் காண்க).

3. மறலி - யமன். வெறி கழுமி - மயக்கம் நிறைந்து. பொறி அழியும் - அறிவு அழியும். இதில் மார்க்கண்டேயன் கதை கூறப்படுகிறது (புராணக்கதை விளக்கத்தில் காண்க). இக் கொச்சகக் கலிப்பா மூன்றும், பொதுவான கடவுள் வாழ்த்தாகவும், மனோன்மணி கனவுகண்டு அதனால் கொண்ட காதல் மனோநிலைக்குப் பொருந்தியதாகவும் இருப்பது காண்க.