பக்கம் எண் :

58மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

80 உவாமதிக் குறுமா சவாவொடு நக்கும்.
வெயில்விரி யெயிலினங் காக்க இயற்றிய
எந்திரப் படைகளுந் தந்திரக் கருவியும்
பொறிகளும் வெறிகொளுங் கிறிகளு மெண்ணில:
சுந்: (எழுந்து)
சம்போ!சங்கர! அம்பிகா பதேஎ!
85 நன்று மன்னவ! உன்றன் றொல்குலங்
காக்கநீ யாக்கிய இவையெல்லாம் கண்டுளேம்.
அல்லா துறுதி யுவதோ? சொல்லுதி!
ஜீவ: என்னை! என்னை! எமக்கருள் குரவ!
இன்னும் வேண்டிய தியாதோ? துன்னலர்
90 வெருவுவர் கேட்கினும்; பொருதிவை வென்றுகைக்
கொள்ளுவ ரென்பதும் உள்ளற் பாற்றோ?
ஆயினும் அரணி லுளபுரை நோக்கி
நீயினி இயம்பிடில் நீக்குவன் நொடியே.
சுந்: காலம் என்பது கறங்குபோற் சுழன்று
95 மேலது கீழாக் கீழது மேலா
மாற்றிடுந் தோற்ற மென்பது மறந்தனை.
வினைதெரிந் தாற்றும் வேந்தன் முனமுனம்,
ஆயற் பாற்ற தழிவும் அஃதொழி
வாயிலு மாமென வையகம் புகலும்.

உவாமதி - முழுநிலா. மாசு - களங்கம். 79, 80 - ஆம் அடிகள் மீன் உருவம் எழுதப்பட்ட பாண்டியனுடைய கொடி காற்றில் அசைந்தாடுவது, முழு நிலாவினுடைய களங்கத்தை நக்குவது போலிருக்கிறது என்னும் கருத்துள்ளது. மீன்கள் பாசி முதலிய அழுக்கைத் தின்பது இயல் பாகலின், நிலாவில் உள்ள களங்கத்தை நக்குவதுபோலிருக்கிறது என்று கூறினார்.

எயிலினம் - கோட்டையின் மதில், கொத்தளம் முதலியவை. எந்திரப் படை, தந்திரக் கருவி, பொறிகள் - பகைவர் போருக்கு வந்தால் அவர்களை எதிர்ப்பதற்காகக் கோட்டைச் சுவர்களின்மேல் அமைக்கப்படும் போர்க்கருவிகள். கிறிகள் - வஞ்சக வழிகள், துன்னலர் - பகைவர். வெருவுவர் - அஞ்சுவார்கள். பொருது - போர்செய்து, அரண்கோட்டை. புரை - குற்றம்; பலவினம். முனமுனம் - முதன் முதலில். ஆயற்பாற்று -ஆராயத்தக்கது.