1.6 தொகுப்புரை

பதினோராம் நூற்றாண்டில் இலக்கிய உணர்வு குறைவாகவே இருந்ததை அறிய முடிகிறது. அதிகமாகக் காணப்படுபவை சமய இலக்கியங்களேயாகும். மன்னர்கள் சைவ சமயத்திற்கு ஏற்றம் தந்ததும், பலவாறாகக் கோயில்கள் அமைத்ததும் இச்சூழல் அமையக் காரணமாக அமைந்தன. அவர்கள் சமயத்திற்கு ஏற்றம் தந்தமையே இக்காலப் பகுதியில் சமயம் சார்ந்த இலக்கியங்களையே எழுதும் பணியும், தொகுக்கும் பணியும் அமைய முக்கியக் காரணியாகும். சைவ சமயம் ஏற்றம் பெற்ற நிலையில், வைணவத்திற்கு ஏற்றம் சற்றே குறைந்த நிலையில் இருந்ததை அறிய முடிகிறது. தனியன்கள் எழுத இதுவே காரணம் எனலாம். சமணர்கள் சில உரை நூல்களை எழுதியுள்ளனர். சைவத்திற்கு அடுத்த படியாகக் சமணர் பங்களிப்பே அதிகம்.

நம்பியாண்டார் நம்பியின் தொகுப்புப் பணி இக்காலக் கட்டத்தின் முக்கியப் பணி எனலாம். தொகுப்புப் பணியுடன் சில பிரபந்தங்களை எழுதிய சிறப்பும் இவருக்கு உண்டு. மிகச் சிறந்த இலக்கியம் என்ற நிலையில் கல்லாடம் சிறப்பிடம் பெறுகிறது. இலக்கியம் வழியாகச் சமய வளர்ச்சி, சமயம் வழியாக இலக்கிய வளர்ச்சி என்ற நிலையைக் கல்லாடம் முன் வைக்கிறது. உரைகள் என்ற நிலையில், இலக்கண உரையில் தொல்காப்பிய உரை இக்காலத்தில் எழுந்த முக்கிய உரையாகும். அதிக நூல்கள் வெளிவராத நிலையில் அக்குறையை ஈடு செய்யும் பொருட்டே உரையாசிரியர்கள் உரையெழுதுவதில் தம் கவனத்தை அதிகம் செலுத்தியதாகக் கொள்ளலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1) கருவூர்த்தேவர் எந்த மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் திருவிசைப்பாப் பாடினார்? விடை
2) இக்காலக் கட்டத்தில் தனியன்கள் எழுதிய வைணவ ஆசிரியர்கள் யார்? விடை
3) இக்காலக் கட்டத்துப் பரணி இலக்கியங்கள் யாவை? விடை
4) கனா நூல் எதைப் பற்றிக் கூறுகிறது? விடை
5) திருமுறைத் தொகுப்பிற்கு நம்பியை ஊக்கப்படுத்திய சோழ மன்னனின் பெயர் என்ன? விடை