3.3 பிச்சமூர்த்தியின் கவிதைகள்

இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்வுக்கான தத்துவ உண்மைகளைக் காண முயன்றவர் பிச்சமூர்த்தி. அந்த முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்.

இவரது 75 கவிதைகளைத் தொகுத்து 1975-இல் எழுத்து பிரசுரம் வெளியீடாக சி.சு. செல்லப்பா வெளியிட்டார். விடுபட்டிருந்த 8 கவிதைகளைத் தேடிச் சேர்த்து பிச்சமூர்த்தி கவிதைகள் என்ற பெயரில் 1985-இல் க்ரியா வெளியிட்டது. மதிநிலையம் வெளியீடாக 2000 ஆண்டில் ந.பிச்சமூர்த்தி கவிதைகள் என்னும் தொகுப்பும் வெளிவந்துள்ளது.

அறிவின் ஒளியும், உணர்வின் ஓட்டமும் இக்கவிதைகளில் உள்ளன. அழகு நயங்கள் நிறைந்துள்ளன. இரசனைக்கு இனிய விருந்தாக ஆகும் சிறந்த இலக்கியப் படைப்புகள் இவை. இவற்றைப் பற்றி இனி அறிந்து கொள்ளலாம்.

3.3.1 கவிதை பற்றிய கவிதை

காவிரி ஆற்றுக் கரையில் பிறந்து வளர்ந்தவர் பிச்சமூர்த்தி. ஊரின் சிறு குழந்தைகள் ஆற்று மணலைக் குவித்து, நீர் தெளித்துக் குச்சிகளைக் கம்பிபோல் வரிசையாய் அடுக்கிக் கூண்டுபோல் செய்து விளையாடுவார்கள். இதைக் கிளிக்கூண்டு விளையாட்டு என்பார்கள். கூண்டு இருக்கிறது, கிளி எங்கே? கூண்டை அப்படியே விட்டுவிட்டுப் போனால் இரவில் கிளி தானாக வந்து அதற்குள் அடையும்; நாளை வந்து பார்க்கலாம் என்று நம்புவார்கள். குழந்தைகளின் இந்த ஆசையும் கற்பனையும் அழகானவை.

கவிஞரும் ஒரு கிளிக்கூண்டு செய்கிறார்; அதில் வார்த்தைதான் மணல்; ஓசையே நீர்; தீராத தாகமே விரல்; ‘பாட்டு’ என்னும் கூண்டைக் கவிஞரும் அமைக்கிறார். ‘அழகு’ என்னும் கிளி வந்து அடையும் என்று நம்புகிறார்.

மணலில் கூண்டு செய்த குழந்தைகள் அடுத்த நாள் காலை வந்தனர். கூண்டைக் கண்டனர்; கிளியைக் காணவில்லை. இரு குழந்தைகள் வருந்தினர். ‘இரவில் கிளி வந்திருக்கிறது. சிறகை ஒடுக்கிப் பார்த்து இடம் இல்லை என்று பறந்து போய்விட்டது, சுவடுகள் இதோ’ என்றனர். பல குழந்தைகள் ‘கிளியாவது, சுவடாவது! முட்டாள்தனம்,’ என்று பரிகாசம் செய்தனர்.

கவிஞரும் தம் பாட்டு என்னும் கிளிக்கூண்டில் ‘அழகு’ என்னும் கிளி வந்து அடைந்ததா? என்று தேடுகிறார். மணல் கூண்டில் கிளி வந்து அடையுமா? உள்ளத்தின் வேட்கை வார்த்தையில் தோணுமா?.... அழகென்ன மீனா? ஓசையின் தூண்டிலில் சிக்குமா? என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்.

சில பெரியோர்கள் சொல்கின்றனர்: ‘நன்னூல் தெரியாத நண்பா!.... சொல்லோடு மன்றாடும் அடிமுட்டாள்’ என்று! வயிற்றையும் வாழ்க்கையையும் விட்டுக் காலத்தையும் காசையும் இழக்கின்ற பைத்தியமா என்று அவரைக் கேட்கின்றனர். அவர் மேல் இரக்கம் கொள்கின்றனர். பல சிறியோர்கள் அவரைப் புகழ்கின்றனர்:

தொட்ட வார்த்தையில் தங்கத்தைத் தேக்கினாய்
தொடாத தந்தியில் ஒலியை எழுப்பினாய்
எண்ணாத உள்ளத்தில் எழிலினை ஊற்றினாய்
அழகின் அம்பை வார்த்தையில் பூட்டினாய்
அழகுப் பித்தே வாழ்க

என்று வாழ்த்துகின்றனர். கவிஞர் ஒரு முடிவுக்கு வருகிறார்.

சிறியோர்கள் வார்த்தையைப் போற்றினேன்
பெரியோர்கள் இரங்கலைத் தள்ளினேன்
ஆறுஎங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன்
அழகினை அழைப்பேன்
எந்நாளும் -

என்று சொல்கிறார். அவரது கிளிக்கூண்டு என்னும் கவிதை இவ்வாறு முடிகிறது.

பிச்சமூர்த்தி தம் இலக்கியப் படைப்புக் கொள்கையாக உலகிற்கு அறிவிக்கும் செய்தியே இந்தக் கவிதை.

இதில் வரும் ‘பெரியோர்கள்’ - கற்றறிந்த பண்டிதர்கள். ‘சிறியோர்கள்’ - இயல்பான படைப்பு ஆற்றல் - கற்பனை ஆற்றல் உடையவர்கள்; புதிய தலைமுறையினர்; இலக்கணம் அறியாதவர்கள். நன்னூல் - தமிழ் இலக்கண நூல். இதைப்பற்றிய குறிப்புத்தான் நமக்கு இந்த இரு பிரிவினரைப் பிரித்து அடையாளம் காட்டுகிறது.

சிறியோர்களோ, ‘உன் சொற்களில் தங்கம் தேங்குகிறது. தந்தியை மீட்டாமலேயே வீணை இசை எழுகிறது. அறிவின் எண்ணம் தோன்றாத உள்ளத்தில் உணர்வாக அழகை நீ ஊற்றுகிறாய். வார்த்தை வில்லாக வளைகிறது, அதில் அம்பாக அழகு பாய்கிறது. உன் முயற்சி வீண் இல்லை’ என்று பாராட்டுகின்றனர்.

கவிஞர் தேடும் அழகு என்ற கிளி அவரது உணர்வின் போக்கில் அமைக்கும் வார்த்தை மணல் கூண்டில் தானாகவே வந்து அடைகிறது. அதைத்தான் அந்தச் சிறியோர்கள் பார்த்திருக்கின்றனர். பிச்சமூர்த்தியோ நிறைவு அற்றவர்; தம் சொல்லில் கவிதை வந்துவிட்டது என்பதை நம்ப மறுப்பவர். இந்தத் திருப்தியின்மையே அவரை மேன்மேலும் வளர்த்தது. தொடர்ந்து வாழ்க்கை என்னும் ஆற்றங்கரையில் கிளிக்கூண்டுகளைக் கட்டிக் கொண்டே இருப்பதும் அழகென்னும் கிளியை அழைப்பதும்தான் தம் வாழ்க்கை என்று அவர் உணர்கிறார்.

‘கவிதை என்னும் அழகு, வார்த்தைகளுக்கோ, வடிவங்களுக்கோ கட்டுப்படாதது; அது எல்லையற்றது’ என்னும் பெரிய உண்மையை உணர்த்துகிறார்.

கொம்பும் கிணறும் என்னும் கவிதை, கவிதையின் வீச்சு, உச்சி வானத்தையும் தொடும்; கிணற்றின் ஆழத்தையும் தொடும் என்று உணர்த்தும் கவிதை.

நாங்களோ கலைஞர் !
ஆமைபோல் உணர்ச்சியின் கிணற்றில் அமிழ்வோம் ; ....
அணிலைப்போல் கொம்பேறி ஒளிக்கனி கடிப்போம்
கொம்பையும் கிணற்றையும் பிணைப்போம்.

3.3.2 வாழ்க்கையும் இயற்கையும்

பிச்சமூர்த்தி இயற்கையில் முழு ஈடுபாடு கொண்டவர். இயற்கையை உற்று நோக்கி அதிலிருந்து வாழ்க்கையைப் படித்துக் கொள்கிறார். துன்பங்களால் துவண்டு போகாமல் வாழும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார். நமக்கும் தாம் உணர்ந்ததை அழகிய கவிதையாய் வடித்துத் தருகிறார்.

ஒளியின் அழைப்பு என்னும் கவிதை மிக அழகானது. அதைப்பற்றி இப்பகுதியில் காண்போம்.

வாழ்க்கையில் போட்டி மிக அதிகமாகிவிட்டது. உணவுக்கும், இருப்பிடத்திற்கும், இவற்றைத் தரும் பணத்திற்கும், பணத்தைத் தரும் வேலைக்கும் எங்கும் எதிலும் போட்டி. இருப்பவை மிகக் குறைவு. மக்கள் எண்ணிக்கையோ மிக அதிகம். முந்திக் கொள்பவர்களே பிழைக்க முடியும் என்ற நிலை. இதனால் போட்டி கடுமையாகிவிட்டது. இந்தப் போட்டியில் ஏழையாய், இளைத்தவனாய்ப் பிறந்துவிட்ட ஒருவன் என்ன செய்ய முடியும்?

வாழ்க்கையின் சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வு சொல்லும் ஆசிரியனாகப் பிச்சமூர்த்தி இயற்கையைத்தான் தேடிப் போகிறார்.

‘அடர்த்தியான பெரிய மரம் ஒன்று. ஒளி, வெளி, காற்று, நீர் அனைத்தையும் தனக்கே எடுத்துக் கொண்டது. நிலத்தையும் பெரும்பகுதி அடைத்துக் கொண்டு படர்ந்து வளர்ந்து நிற்கிறது. ‘பட்டப் பகலில் இரவைக் காட்டும்’ என்று படம்பிடிக்கிறார் அதை! இந்தப் பேராசை பிடித்த மரத்தின் அடியில் உள்ளது சிறிய கமுகு (பாக்கு). இதனால் சத்துக் கிடைக்காமல் வளர்ச்சி இன்றிச் சோனியாக (இளைத்துப்போய்) நிற்கிறது அந்தக் கமுகு. இந்த நிலையில் தன் பிறப்பை - சூழ்நிலையை நொந்து அது செத்துப் போய்விடவில்லை. வாழ்வதற்காகப் போராடுகிறது. தன்னால் இடம் பெயர்ந்து வேறு ஓர் இடத்துக்குச் செல்ல முடியாது என்று தெரியும். அதற்காகத் தளரவில்லை. தன் உடம்பை வளைக்கிறது. மரத்தை, அதன் இருட்டை மீறிக் கொண்டு ஒளியைத் தேடி வான் வெளியில் தலை நீட்டுகிறது, வாழ்கிறது.

கவிஞர் தம்மையும் இந்தக் கமுகையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். தாமும் இதன் நிலையில் இருப்பதை உணர்கிறார். பழமையின் இருட்டு; பொய்களின் இருட்டு; ‘உலகம் பொய் சாவுதான் மெய்’ என்னும் மூட வேதாந்தங்களின் இருட்டு. இவற்றுக்கு உள்ளே வளர்ந்ததால் தானும் சோனிக் கமுகாக ஆகிவிட்டதை உணர்கிறார்.

பெருமரத்துடன் போட்டி இடும் சோனிக் கமுகு இவருக்கு ஆசிரியன் ஆகிறது. வாழ்க்கை என்னும் போரை எதிர் கொள்ளும் நம்பிக்கையைப் போதிக்கிறது:

முண்டி மோதும் துணிவே இன்பம்
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி

என்று உணர்த்துகிறது. மனம் தேறுகிறார். தம்மைப் போல் ‘சோனி’ ஆகிவிட்ட உலக மாந்தர்க்கும் உரைப்பதுபோல், தமக்குச் சொல்கிறார்:

ஜீவா ! விழியை உயர்த்து
சூழ்வின் இருள் என்ன செய்யும்?
அமுதத்தை நம்பு
ஒளியை நாடு
கமுகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்
சூழ்வின் இருள் என்ன செய்யும்?

(ஜீவா = உயிர் வாழ்பவனே; சூழ்வு = வாழ்க்கைச் சூழ்நிலை; அமுதம் = (இங்கு) உயிர்தரும் ஒளி)

தளராத ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் இளைஞர்க்குக் கற்பிக்கப் பாடமாக வைக்க வேண்டிய அருமையான கவிதை இது.

மழைஅரசி, காட்டுவாத்து இவையும் நம்பிக்கையின் குரலை நம் மனத்தில் ஒலிக்கும் அழகிய குறுங்காவியங்கள் ஆகும்.

சைபீரியாவிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள வேடந்தாங்கலுக்குப் பறந்து வருகிறது காட்டுவாத்து. வேடந்தாங்கலில் கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது. அவற்றை வளர்த்தெடுத்து அவற்றுடன், மீண்டு செல்கிறது. இதன் செயல், ‘வாழ்வு எங்கிருந்தாலும் நம்பிக்கையோடு அதைத் தேடிச் செல்’ என்னும் இயற்கையின் செய்தியாகிறது. அறவுரையாகிறது.

3.3.3 காதலும் இறைக்காதலும்

காதல் உயிரின் இயற்கை. உயிர்களின் உலகத்தை இயக்கும் சக்தியே அதுதான். ஒவ்வோர் அணுவிலும் துடித்துக் கொண்டு இருக்கும் ஒரு தவிப்பு அது.

  • துன்பம் எனும் இன்பம்

காதலர் சேர்ந்து தாகம் தணிவது இனிமைதான். அதைவிட, பிரிந்து தவித்து இருக்கும் கிளர்ச்சியே அதிக இனிமையானது. அந்தத் துன்பமே பெரிய இன்பம்.

இந்த மெய்யுணர்வின் வெளிப்பாடாக அமைந்ததுதான் காதல் என்ற கவிதை. இதுதான் பிச்சமூர்த்தி எழுதிய முதல் கவிதை.

மாந்தோப்பு வஸந்தத்தின் பட்டாடை உடுத்திருக்கிறது
மலர்கள் வாசம் கமழ்கிறது
மரத்தில் இருந்து ஆண்குயில் கத்துகிறது
என்ன மதுரம் ! என்ன துயரம் !

இப்படித் தொடங்குகிறது கவிதை. இளவேனில் காலம். மனிதனிலும் மற்ற உயிர் இனங்களிலும் மட்டும் அல்ல, பயிர் இனங்களிலும் கூடக் காதல் உணர்ச்சி பொங்கும் காலம். மாந்தோப்பு மணப்பெண் போலப் பட்டாடை உடுத்து நிற்கிறது. எங்கும் மலர்கள், காற்றும் வாசனையும் தழுவிக் கிடக்கின்றன. மரத்தில் இருந்து ஆண்குயில் கூவுகிறது. தன் இணையைச் சேர்வதற்காகத் தவிக்கிறது. தவிப்பு அழைப்பாகிறது. அதில், என்ன இனிமை! எவ்வளவு தனிமைத் துயரம்! அந்தக் குரலுக்குள் ஒளிந்திருக்கும் வார்த்தைகள் கவிஞருக்குப் புரிகின்றன.

‘காதல் என்னும் தீயில் நெஞ்சம் கருகுகிறது. காதல் என்னும் நீரை ஊற்றித் தீயை அணைக்க வா’ என்று பெண்குயிலை அழைக்கிறதாம் ஆண்குயில்.

பக்கத்தில் இருக்கும் கொல்லையில் இருக்கிறது பெண்குயில். அது எதிர்க்குரல் கொடுக்கிறது. இந்தக் குரலில் இனிமையை முந்திக் கொண்டு சோகம் ஒலிக்கிறது. என்ன சொல்கிறது?

‘பிரிவின் தனிமை உயிரைத் தீக்கங்கு ஆக்கிவிட்டது. அதை உன் குரல் மூட்டிப் பெரிய தீச்சுடர் ஆக்கி விட்டது.

என் நெருப்பு உன் நெருப்பை அணைக்குமா?
காதல் தீர்வதைவிட இக்கிளர்ச்சியே போதை

இந்தத் துன்பம் தான் இன்பம்!’ என்கிறது.

கவிதையின் மூன்றாவது நிலையில் காதல் தெய்வம் பேசுகிறது. காற்றின் ஒலியில் (குரல் இன்றியே) இது கவிஞருக்கு மட்டும் கேட்கிறது.

ஒன்றுபட்டால் ஓய்வு உண்டாகும் ;
காதல் குரல்கட்டிப் போகும்.....

கிடைத்துவிட்டால் முயற்சி இல்லை. சேர்ந்துவிட்டால் தேடல் இல்லை. தேடல் இல்லையேல் இயக்கம் இல்லை. கற்பனையின் இனிப்பு இல்லை. கசப்புத்தான் மிஞ்சும்.

சேர்ந்துவிட்டால் அழைப்பு ஏது? காதல், குரல் எழுப்பாது; குரல் கட்டி ஊமை ஆகும்.

காதலின் குரல்கள்தாமே கவிதை, இசை, மற்றக் கலைகள் எல்லாம்? எல்லாமே இல்லாமல் போகும்....

கவிதையின் நான்காவது நிலையில் கவிஞரே பேசுகிறார். கவிஞர் மட்டும் பேசுகிறாரா? அவர், காதல் தெய்வம், பெண்குயில், ஆண்குயில் எல்லாம் ஒருவரே ஆகிப் பேசுகின்றாரா என்று பிரித்து அறிய முடியாத பேச்சு :

பிரிவினையின் இன்பம் இணையற்றது
தெரியாமலா ஈசனும் இயற்கையும் ஓடிப் பிடிக்கிறார்கள் !
தெய்வ லீலையை உரக்கச் சொல்லு
க்காவூ........க்காவூஉ........

இப்படி முடிகிறது கவிதை. உலக வாழ்க்கையே ஒரு விளையாட்டுத் (லீலை) தான். கடவுளும் இயற்கையாகிய நாம் எல்லாமும் பிரிந்து, ஒளிந்து கண்டு பிடிக்கச் சொல்லி ஆடும் ஒரு ‘கண்ணாமூச்சி’ ஆட்டம்.

சேருவதில் இன்பம் இருக்கிறது. அது கண்டுபிடித்தவுடன் ஏற்படும் கண நேர மகிழ்ச்சி. அதைவிடப் பிரிவில், தேடுவதில் ஏற்படும் இன்பம் மிகப் பெரியது, இணையற்றது. இதை நன்கு உணர்ந்துதான் இறைவன் நம்மிடம் இருந்து பிரிந்து ஒளிந்து விளையாடுகிறான். ‘இந்தத் தெய்வ விளையாட்டை (லீலையை) உரத்த குரலில் பாடு என்று க்காவூ..... க்காவூஉ’ என்னும் குயில்களின் கூவலோடு கவிதை முடிகிறது.

உண்மையில் பிச்சமூர்த்தி பார்த்தது பூத்த மாந்தோப்பை மட்டும்தான். கேட்டது இணைக்குயில்களின் குரல்களை மட்டும்தான். இவற்றின் உள்ளே இருந்து என்னென்ன உணர்வுகளைப் படித்துவிட்டார்! எத்தனை பெரிய தத்துவத்தைப் படித்துவிட்டார்!.

இயற்கை, வாழ்க்கை, ஆன்மா, இறைவன் இவ்வளவையும் பார்த்துவிட்டார். இவை அனைத்தையும் இணைக்கும் காதல் என்னும் உறவு நிலையை உணர்ந்து விட்டார். அதில் பிரிவுதான் இன்பம் என்ற மெய்யுணர்வை அடைந்து விட்டார். விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் இவற்றின் தேடல் எல்லாம் இந்தப் பிரிவால் விளையும் தேடல்கள் தாம் என்று உணர்த்தி விட்டார்.

இந்தக் ‘காதல்’ என்ற முதல் கவிதையில் தொடங்கிக் கடைசியாக எழுதிய தேவை என்ற கவிதை வரை; இவரது 83 கவிதைகளிலும் என்ன பொருள் பொதிந்திருக்கிறது? இயற்கை - மனிதன் - இறைவன்: இந்த உறவு நிலையின் தத்துவச் சாரம்தான் அமைந்து கிடக்கிறது.

தமிழில் கவிதைக்கு இது ஒரு புதுப்பாதை திறந்திருக்கிறது. இதனால்தான் இவரது கவிதை புதுக்கவிதை ஆகியிருக்கிறது.

  • பெறுவது அன்று, தருவதே காதல்

காதல் என்னும் தலைப்பில் இன்னொரு கவிதையும் படைத்திருக்கிறார் பிச்சமூர்த்தி. காதலியாகத் தம்மைக் கற்பனை செய்து கொண்டு பாடிய கவிதை.

காதலரைத் தெருவில் காண்கிறாள். காதல் பொங்குகிறது. சேர்ந்து இன்பம் காண ஆசை கொண்டு வீட்டுக்கு அழைக்கிறாள். ஒருநாள் காதலர் மனம் கனிகிறார். ‘நாளை வருவேன்’ என்கிறார். தன்னையும் வீட்டையும் தூய்மை செய்து அலங்காரம் செய்து ஆவலுடன் காத்திருக்கிறாள். அவர் வரவில்லை. ஒருநாள் எதிர்பாராமல் வந்து நிற்கிறார் -

எண்ணாத நாள் ஒன்றில்
வந்தார் -
கோடை மழைபோல்
காட்டாற்று வெள்ளம்போல்
வீடெங்கும் குப்பைகூளம்
எங்கிலும் கந்தல் துணிகள்
முகம் எங்கிலும் வேர்வை
கைஎங்கும் சமையல் மணம்
எங்கும் இல்லநெடி
சிறு புகைச்சல்,
ஒட்டடை
வேளை பார்த்தா
நாதர் வந்தார்?
அசடானேன்.
கேட்பது அல்ல காதல்
தருவதுதான் என்று
தரையில் அமர்ந்தார்
என்னைக் காணேன்.

என்று காதலில் இணைவதைப் பாடி முடிகிறது இந்தக் கவிதை. முதல் ‘காதல்’ கவிதையில் இவர் காட்டிய பிரிவின் தத்துவம்தான் இதில் இணைவின் தத்துவம் ஆகக் கவிதை ஆகி இருக்கிறது. நண்பர்களே! முரண்பாடு இருப்பதுபோல் தோன்றுகிறதா? முரண்பாடு இல்லை. கண்ணாமூச்சியில் ‘தேடும் இன்பத்தை’, கிளர்ச்சியை முதல் கவிதை உணர்த்துகிறது. தேடி, எதிர்பாராமல் கண்டு பிடித்தவுடன் கிடைக்கும் ‘கூடும் இன்பத்தை’ இந்தக் கவிதை உணர்த்துகிறது. விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ‘என்னைக் காணேன்’ என்ற தொடரைக் கவனியுங்கள். அவர் வந்து சேர்ந்தபின் ‘தான்’ காணாமல் போகிறது. காதலில் மறுபடி ஆன்மிகம் கலக்கிறது. தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள் என்ற திருநாவுக்கரசரின் ஆன்மக் காதல் உணர்வை இங்கும் காண்கிறோம். (திருவாரூர்த் திருத்தாண்டகம், 6501)

  • பிரிவு ஏது?

சிணுக்கம் என்னும் கவிதையில் இந்த நுணுக்கம் விளக்கம் பெறுகிறது. இதுவும் பிரிவு பற்றியது தான். ஊருக்குப் புறப்பட்டால், உறவினர் வண்டிப் படி அருகே ‘மதகு நீர்ச் சுழல் போல்’ தயங்கி விடை பெறுகின்றனர். வேலைக்குப் போகும் மகன் ‘போய் வாரேன் அம்மா’ என்று விடை பெறுகிறான். குளத்தின் சிறு அலைகூடக் கரை ஓரப் படியிடம் ‘சிறுமூச்சு’ விட்டு விடை பெறுகிறது. ‘நீ மட்டும் விடைபெறுவது இல்லை. கல்லா நீ’ என்கிறாள் தலைவி. இதற்குத் தலைவன் பதில் சொல்கிறான் : (இவர்களுக்கு வேலைக்குச் செல்லும் வயதில் மகன் இருக்கிறான்!)

"அடி கிறுக்கே !
சென்றால் அன்றோ விடைபெற வேண்டும்
போனால் அன்றோ வரவேண்டும்?
என்உயிர் என்னிடம்
இல்லாது இருக்கையில்
இருவர் ஏது?......
வீட்டில் இருந்தும்
என்னுடன் வருகிறாய்
வெளியே சென்றாலும்
உன்னுடன் இருக்கின்றேன்
கிறுக்கே” என்றேன்
சிணுக்கம் சிரிப்பாச்சு -

இதுவும் கூடக் கண்ணாமூச்சி விளையாட்டின் இன்னொரு பரிமாணம் தான். பிரிதல், சேர்தல் என்பவை கூட இன்பம் தரும் இந்த விளையாட்டு வசதிக்காகச் செய்து கொண்ட ஒரு ஏற்பாடுதான். உண்மையில் நீ, நான் இரண்டும் வேறல்ல. ஒன்றுதான். ஆன்மிக நெறியில் இதை இரண்டற்ற நிலை (அத்துவிதம்) என்பார்கள். இதைத்தான் இனிய காட்சிப் படிமமாகச் சொல் ஓவியம் தீட்டியிருக்கிறார் பிச்சமூர்த்தி.

காதலை நினைக்கும் போது ஆன்மக் காதலையும் இணைத்தே நினைக்கிறார் என்பதை இந்தக் கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன.

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1)

‘புதுக்கவிதை’ என்ற பெயர் பெறுவதற்கு முன், அது என்ன பெயரால் அழைக்கப்பட்டது?

(விடை)
2) காதலில் அதிக இன்பம் எதில்? இணைவதிலா? பிரிவதிலா? (விடை)
3) பிச்சமூர்த்தி எந்த இயற்கைப் பொருளைப் பார்த்துத் தன்னம்பிக்கைப் பாடம் கற்றார்? (விடை)
4)

பிச்சமூர்த்தியின் ‘கிளிக்கூண்டு’ என்பது எதைக் குறிக்கிறது?

(விடை)