x

யாப்பருங்கலக் காரிகை

 
சேர்த்திருத்தல் வேண்டும். 22-ஆம் காரிகைக்குப்பின் காணப்படும் உதாரண
முதனினைப்புக் காரிகைகள் குணசாகரர் செய்த *உரைச் சூத்திரங்கள் போலும்.
நூலாசிரியர் பிற்பகுதிக்குத் தாமே இலக்கிய முதனினைப்பை எழுதாமல் விட்ட காரணம்
புலனாக வில்லை.

     ஒவ்வோரியலின் ஈற்றிலுமுள்ள காரிகை முதனினைப்புச் சூத்திரங்கள்
நூலாசிரியராலும் உரையாசிரியராலும் எழுதப்படாமல் பிறதொருவரால் இயற்றப்
பட்டிருத்தல் வேண்டும். சுவடிதோறும் இவை வேறு வேறாக உள்ளன. ‘யாப்பருங்கலக்
காரிகை மூலமும் உரைப்பாடமும் முற்றும்’ என்ற தொடருக்குப்பின் ஒழிபியல்
முதனினைப்புக் காரிகை காணப்படுவதும் இதனை வலியுறுத்தும். சில சுவடிகளில்,
முதனினைப்புக்கள் காரிகையாக இராமல் ஆசிரிய அடி வரவாக அமைந்துள்ளன.
இவற்றின் விவரத்தை அங்கங்கே காணலாம்.

யாப்பருங்கலமும் காரிகையும் ஒருவராலேயே இயற்றப்பட்டன வாயினும்
இவ்விரண்டற்கும் இடையே சில வேறுபாடுகள் காணப் படுகின்றன; அவை வருமாறு:

      (1) யாப்பருங்கலம் எழுத்துப் பதினைந்து என்று கூறும்; காரிகை இவற்றைப்
பதின்மூன்று என்று நுவல்கின்றது. (கா. 44)

      (2) எழுத்து, அசை, சீர், முதலியவற்றைப் பற்றிப் புற னடையாகக் கூறும்
செய்திகள் காரிகையில் ஒழிபியலில் வேறாகக் கூறப்படுகின்றன; யாப்பருங்கலம் இவற்றை
அந்த அந்த உறுப்பைப் பற்றிய ஓத்தினுள்ளேயே கூறிச் செல்கின்றது.

(3) காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகள் யாப்பருங்கலத்தில் விதப்பினால் உரையில்
பெறவைக்கப்படுகின்றன; சிந்தியல் வெண்பாவின் வகைகளும் இங்ஙனமே; காரிகை
நூலுள் இவை காரிகைக் சூத்திரங்களிற் கூறப்படுகின்றன.

      (4) யாப்பருங்கலத்தில் மருட்பாவுக்குத் தனிச் சூத்திரமில்லை; விதப்பினால்
அதனை ஆசிரியர் பெறவைத்தார்; காரிகையில் அது தனிக்காரிகையாக (கா. 35)
அமைந்துள்ளது.

* இவ்வுரைச் சூத்திரங்கள் சில பிரதிகளில் இல்லாமையினாலும், காணப்பட்ட
பிரதிகளிலும் பாடபேதம் மிகுதியாக இருந்தமையினாலும் இவற்றை இப்பதிப்பில் பகரக்
குறிகளுக்கிடையில் பதிப்பிக்கலாயிற்று.