xii இந் நூலாசிரியர் பிரபந்தங்கள் பல பாடிப் புகழ் பெற்ற பெருங்கவிஞர் எனினும், தமிழ் உலகில் இவருக்கு இறவாப் புகழ் நல்கி வருவது இவர் இயற்றிய ‘இலக்கண விளக்கமே’ யாகும். இந்நூலின் பொருட் படலத்திலுள்ள சொல்லணியின் சில நூற்பாக்களைச் சதாசிவநாவலர் பாடினார் எனவும், கடைசி இயலாகிய பாட்டியலைத் தியாகராச தேசிகர் பாடினார் எனவும் குறிப்பிடுகின்றனர். இருவரும் இந்நூலாசிரியர்தம் புதல்வர்களே. பாட்டியல் அமைப்பினை நோக்க அக் கருத்து ஏற்புடையதாகவே தோன்றுகிறது. அச்செய்தி விளக்கத்தைப் பாட்டியல் முகவுரையில் காணலாம். இனிச் சொல்லணி பற்றிய நூற்பாக்களைச் சதாசிவ நாவலர் பாடினார் என்பதற்கு அகச்சான்று எதுவும் இன்று. இப்புலவர் பெருமானார் பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியவராவர். இவர் மரபினர் இன்றும் தமிழ்ப் புலவர்களாக விளங்குவது மகிழ்வு தருவதாகும். |