இலக்கண விளக்கம்


 வெளியிடுவோர் உரை

     இலக்கண விளக்கம் என்னும் இவ்வுயரிய தமிழ் இலக்கண நூல்
இயற்றமிழ் இலக்கணங்களை மூன்று பகுதிகளாக முறையாக உரைப்பதாகும்.
தொல்காப்பிய நெறியை வகைப்படுத்தித் தந்த பெருமை இந் நூலுக்குண்டு.
நூலகம் இதுவரை எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரு
பகுதிகளையும், மூன்றாம் பகுதியாகிய பொருளதிகாரத்தில் புறத்திணையியல்,
அணியியல், செய்யுளியல் ஆகியவற்றையும் வெளியிட்டு உள்ளது.
இப்பகுதியில் அகத்திணையியலை இரண்டு தொகுதிகளாக இப்பொழுது
நாங்கள் அச்சிட்டுள்ளோம். விரைவில் வெளிவரவிருக்கிறது. இப்பொழுது
வாசக அன்பர்களுக்குப் பாட்டியல் பிரிவை அளித்து மகிழ்வதோடு,
இலக்கணவிளக்கத் தொகுதி இத்துடன் நிறைவு பெறுகிறது என்பதையும்
தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நூலாசிரியராகிய வைத்தியநாத தேசிகர் அவர்கள் பதினேழாம்
நூற்றாண்டில் வாழ்ந்த முப்பெரும் இலக்கணப் புலவர்களுள் தலையாயவர்.
தருமை ஆதீனத்தைச் சார்ந்த தமிழ்ப் புலவர் பரம்பரையில் தோன்றிய இவர்
தென்னாட்டை ஆண்ட நாயக்க மன்னர்களின் கவர்னர் ஒருவரின்
மக்களுக்குச் சிலகாலம் கல்வி புகட்டி வந்திருக்கிறார். இவர் இலக்கண
மேதை, கவிஞர், அறிஞர், ஆசிரியர். இத்தகு பெருமை சான்ற இவருடைய
புலமையாலும், விடா முயற்சியாலும் விளைந்த இந்நூல் இன்று நமக்கு
உறுதுணையாயுள்ளது.