பிற்சேர்க்கை 4

 சதுரகராதி

 

[18ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் இயற்றியது
இந்நூல் குறிப்பிடும் 96 வகைப் பிரபந்தங்கள்]
 

1.  அகப்பொருட்கோவை :

 

இருவகைப்பட்ட முதற்பொருளும் பதினான்கு வகைப்பட்ட
கருப்பொருளும் பத்து வகைப்பட்ட உரிப்பொருளும் பொருந்தி, கைக்கிளை முதலுற்ற அன்புடைக்காமப பகுதியவாம் களவொழுக்கத்தினையும் கற்பொழுக்கத்தினையும் கூறுதலே எல்லையாக, கட்டளைக்கலித்துறை நானூற்றால், திணை முதலாகத் துறை ஈறாகக் கூறப்பட்ட பன்னிரண்டு அகப்பாட்டுறுப்பும் வழுவின்றித் தோன்றப் பாடுவது. இது வெண்பா, அகவல், கலி, வஞ்சி, வண்ணம் இவற்றானும் வழங்கப்படும்.

2.   அங்கமாலை :

 

ஆண் மகனுக்கும் பெண் மகளுக்கும் மிக்கனவாக எடுத்துக் கூறும்
அவயவங்களை வெண்பாவாலாயினும் வெளிவிருத்தத்தா லாயினும்
பாதாதிகேசம் கேசாதிபாதம் முறை பிறழாது தொடர்வுறப் பாடுவது.

3.   அட்டமங்கலம் :

 

கடவுளைப்பாடி அக்கடவுள் காக்க என ஆசிரியர் விருத்தம் எட்டில்
அந்தாதித்துக் கூறுவது.

 

4.  அநுராகமாலை :

 

தலைவன் கனவின்கண் ஒருத்தியைக் கண்டு கேட்டு உண்டுஉயிர்த்து
இனிமையுறப் புணர்ந்ததைத் தன் உயிர்ப்பாங்கற்கு உரைத்ததாக நேரிசைக் கலிவெண்பாவால் கூறுவது.