ஸ்ரீ :

பதிப்பாசிரியர் முன்னுரை

பாட்டியல் என்பது செய்யுளிலக்கணத்தினுள் ஒரு பிரிவாகும். இவ்விலக்கணங்கூற எழுந்த தமிழ் நூல்கள் பலப்பல. அவற்றுள் பன்னிருபாட்டியல் என்பது பன்னிரண்டு பாட்டிலக்கணம் என்று பொருள்படும். அஃது ஆகுபெயராய் வெவ்வேறாசிரியர்களால் இயற்றப்பட்ட பாட்டிலக்கணநூல் பன்னிரண்டினை உணர்த்துவதுடன் அப்பன்னிரண்டு நூல்களிலிருந்து பிற்காலத்தாரொருவர் எடுத்துத் தொகுத்த சூத்திரங்களையுடையதொரு தொகை நூலினையும் உணர்த்திநிற்கும்.

கோவைக்கொத்துப்போலப் பல பாட்டிலக்கணநூல்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்ட சூத்திரங்களையுடைய இந்நூலுள் 1 அகத்தியர், 2 அவிநயனார், 3 இந்திரகாளியார், 4 கபிலர், 5 கல்லாடர், 6 கோவூர்கிழார், 7 சீத்தலையார், 8 செயிற்றியனார், 9 சேந்தம்பூதனார், 10 நற்றத்தனார், 11 பரணர், 12 பல்காயனார், 13 பெருங்குன்றூர்கிழார், 14 பொய்கையார், 15 மாபூதனார் என்னும் பதினைந்து பாட்டியற்புலவர் பெயர்கள் குறிக்கப் பட்டுள்ளன. அவைகொண்டு பாட்டியனூல் பன்னிரண்டு இவையென்றோ அவற்றை இயற்றினார் இன்னாரின்னாரென்றோ துணியுமாறில்லை.

இப்பன்னிருபாட்டியல் 360 சூத்திரங்களுடையது; அவற்றுள் 359 சூத்திரங்கள் நூற்பா. 204-ஆம் சூத்திரம் ஒன்றுமட்டும் நேரிசைவெண்பா. எழுத்தியல் சொல்லியல் இனவியல் என்னும் மூன்றியல்களுடைய இந்நூலுள் எழுத்தியல் எழுத்தின் பிறப்பு, வருணம், கதி, உண்டி, பால், தானம், கன்னல், புள், நாள் என்னும் ஒன்பதனையும் விரிப்பது. சொல்லியல், சீர்க்கணம் மங்கலச்சொல் பெயர்ப்பொருத்தம் என்பவற்றை விளக்குவது. இனவியல்,