ஒப்புமைப் பகுதிகளும், பிறவுரையாசிரியர்கள் மேற்கோள்களாக எடுத்தாண்டிருக்கும் இந்நூற்பகுதிகளும், இவ்வுரையில் விளங்கிய மேற்கோள்களுள்ள இடங்களும், இன்றியமையாக் குறிப்புகளும் ஆங்காங்குப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன; 21-ஆம் பாடலின் 3-ஆம் அடியிலுள்ள, 'தைப்பமை சருமத்து' என்பது சான்றோர் செய்யுட்கண் வடசொற் சிதைந்து இயைந்ததற்கு உதாரணமாகக் காட்டப் பெற்றிருத்தல் (தொல். எச்ச. சூ. 6. ந; இ. - வி. சூ. 175) பின்பு தெரியவந்தது.

பின்னுள்ள இரண்டு மேற்கோள்களுக்கு மட்டும் இடம் விளங்கவில்லை;

(i) "நெட்டிலை வஞ்சிக்கோ" (12 : 4, உரை),

(ii) "அரக்கிறலி . . . . டைது" (18 : 5, உரை)

இப்புத்தகத்திற் சேர்க்கப்பட்டுள்ள அரும்பத முதலியவற்றின் அகராதியில் இந்நூல் மூலம் உரை இவற்றிலுள்ள சொற்களும் வாக்கியங்களும் விஷயங்களும், உவமைகளும் அடங்கியுள்ளன. விளங்குதற்பொருட்டு அவற்றுட் சிற்சில வெவ்வேறு விதமாகவும் இதில் அமைக்கப்பெற்றுள்ளன.

தலைச்சங்கத்தில் எத்துணையோ பரிபாடல்கள் இருந்தனவென்று இறையனாரகப்பொருளுரை முதலியவற்றால் தெரிந்தாலும் அவற்றுள் ஒன்றேனும் இப்போது கிடைக்கவில்லை. ஆயினும், பிற்காலத்தில் திருக்குருகைச் சடகோபாழ்வார் சந்நிதிக்கவிராயர் பரம்பரையிலிருந்த சிறந்த கவிஞரொருவரால் இயற்றப்பெற்றதாகத் தெரிகின்ற பாப்பாவினம் என்னும் நூலில், அவர் இயற்றிய நான்கு பரிபாடல்கள் காணப்படுகின்றன. அவற்றின்பின் தனித்தனியே எழுதப்பெற்றிருந்த அடியிலுள்ள குறிப்புக்கள் இந்நூலாராய்ச்சிக்கு மிக உபயோகமாக இருந்தன. அவை வருமாறு:

"கருங்கடலுடுத்த" என்னும் பாடலின் குறிப்பு:

"தொல்காப்பியனார் 'செப்பிய நான்குந் தனக்குறுப் பாக' என்று கூறவும் இப்பரிபாடலகத்து எருத்தென்பதோருறுப்பினையும் கூட்டி ஐந்தாகக் கூறியதென்னையெனின், அஃதே! நன்று சொன்னாய்;
'தரவேயெருத்தே யராகங் கொச்சக, மடக்கியல் வாரமொ டைந்துறுப்புடைத்தே' - என்பது