பழையவுரை மிகச் சிறந்த உரையாதலின்,
அதனைச் சிறிதும் மாற்றாது,
பாட்டோடு இயைத்துக் காண்பதற் கெளிதாகக்கண்ணழித் துரைவடிவில்
அது காட்டப்பட்டுள்ளது. பாட்டும் உரையும் ஏட்டுப் பிரதிகள் சிலவற்றோடு
ஒப்புநோக்கப்பெற்றுச் சில திருத்தங்களும் பெற்றுள்ளன.
நானூறு பாட்டுக்களைக் கொண்ட
இப் புறநானூறு இப்போது
இயன்றுவரும் முறையில் முழுவதும் ஒரு நூலாக வெளிவரின் கைக்கடங்காப்
பருமையும் எடுத்தேந்திப் படித்தற்கு அருமையும் தருமென்னும் கருத்தால்
இருநூறு பாட்டுக்கள் கொண்ட இருபகுதியாக வெளிவந்துள்ளது. இதன்கண்
முதல் இருநூறு பாட்டுக்கள் உள்ளன.
முப்பெருங்காப்பிய ஆராய்ச்சியாளரும், ஐங்குறுநூறு,
பதிற்றுப்பத்து
முதலிய தொகை நூல்கட்கு விளக்கவுரை கண்டவரும், அண்ணாமலைப்
பல்கலைக் கழக ஆராய்ச்சிப் பகுதி விரிவுரையாளராகவிருந்து இப்போது
மதுரைக் தியாகராசர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகவிருக்கும் சித்தாந்த
கலாநிதி, ஒளவை.சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் இவ் வெளியீட்டிற்கு
உறுப்பாகும் முன்னுரை, கண்ணழித்துரை, விளக்கவுரை முதலியன எழுதி
யுதவினார்கள். அவர்களுடைய ஆராய்ச்சியின் அருமை பெருமைகள் இதன்
முன்னுரை விளக்கவுரைப் பகுதிகளைக் காண்பார்க்கு இனிது புலனாம்.
இதுகாறும் எம் வெளியீடுகளை யேற்று எம்மை யூக்கிவரும்
தமிழகம்,
இதனையும் ஏற்றுத் தன் பெருந்துணையைத் தளராமே நல்குமெனும்
துணிவுடையேம்.
சைவசித்தாந்த
நூற்பதிப்புக் கழகத்தார்.