எ - டு :
"அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்."
"வாய்மை
யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்."
"உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு."
நவில்தொறும் நயமுடைமை :
இதுவரை
பகுதிக்கும் முழுமைக்கும் சுருக்கமாகவும் பெருக்க மாகவும் திருக்குறட்குத் தோன்றியுள்ள உரைகள் ஏறத்தாழ நூறும், அது
மொழிபெயர்க்கப் பெற்ற மொழிகள் இருபதும், ஆகும். ஆயினும், இன்னும்
அச்சுரங்கத்தினின்று கருத்துமணிகள் தோண்டத் தோண்ட மேன்மேலும் வந்து கொண்டேயிருக்கின்றன.
எ - டு :
"நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு."
நாடு என்ப - சிறந்த நாடென்று சொல்லப்படுவன; நாடா வளத்தன - பிறநாடுகளின் உதவியை வேண்டாது தமக்கு வேண்டிய பொருள் வளங்களையெல்லாம் தம்மகத்தே கொண்டனவாகும்;
நாடவளந்தரு நாடு - பிற நாட்டுதவியை நாடுமாறு குன்றிய வளங் கொண்ட நாடுகள்; நாடு அல்ல - சிறந்த நாடாகா.
"மணற்கிளைக்க நீரூறு மைந்தர்கள் வாய்வைத்
துணச்சுரக்குந் தாய்முலை யொண்பால் - பிணக்கிலா
வாய்மொழி வள்ளுவர் முப்பான் மதிப்புலவோர்க்
காய்தொரு மூறு மறிவு." - (திருவள்ளுவமாலை)
நடுவு நிலைமை :
எல்லாரும்
வாழவேண்டுமன்பதும், குற்றத்திற்கேற்ப எல்லாரையும்
ஒப்பத் தண்டிக்க வேண்டுமென்பதும், திருக்குறளின்
நடுநிலைக் கொள்கைகளாம். இவை ஆரியக் கொள்கைகட்கு
நேர்மாறானவை.
"வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி யொரு குலத்திற் கொருநீதி."
என்று மனோன்மணீய ஆசிரியர் கூறுதல் காண்க.
|