மோசிகீரனார்

27.ஆண்பாலே ழாறிரண்டு பெண்பா லடுத்தன்பு
பூண்பா லிருபாலோ ராறாக - மாண்பாய
காமத்தின் பக்கமொரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு.

(பொ--ரை.) திருவள்ளுவர் ஆண்பாற்கூற்று ஏழதிகாரமும் பெண்பாற் கூற்றுப் பன்னீரதிகாரமும் இருபாற் கூற்று ஆறதிகாரமுமாக, இன்பத்துப்பாலை மூன்றாக வகுத்துரைத்தார்.

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

28.ஐயாறு நூறு மதிகார மூன்றுமா
மெய்யாய வேதப் பொருள்விளங்கிப் - பொய்யாது.
தந்தா னுலகிற்குத் தான்வள் ளுவனாகி
யந்தா மரைமே லயன்.

(பொ--ரை.) நான்முகன் திருவள்ளுவனாகி வடமொழி வேதப் பொருளைத் தமிழில் 133 அதிகாரமாக விளக்கிக் கூறினான்.

மதுரைத் தமிழ் நாகனார்

29.எல்லாப் பொருளு மிதன்பா லுளவிதன்பா
லில்லாத வெப்பொருளு மில்லையாற் - சொல்லாற்
பரந்தபா வாலென் பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத் துணை.

(பொ--ரை.) எல்லாப் பொருளும் இதன்கண் உள. இதில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை. ஆதலால், உலகத்தார்க்கு இவ்வொரு நூலே போதுமானதாம்.

பாரதம் பாடிய பெருந்தேவனார்

30.எப்பொருளும் யாரு மியல்பி னறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாஞ் செப்பவரு - முப்பாற்குப்
பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்.