பதிகம் - (கதை பொதி பாட்டு)

59--68. அங்கைப் பாத்திரம் ஆபுத்திரன்பால் சிந்தாதேவி கொடுத்த வண்ணமும்-அகங்கையிலிருந்த பிச்சைப் பாத்திரத்தை ஆபுத்திரனிடம் கலைமகள் அளித்தவாறும், மற்று அப்பாத்திரம் மடக்கொடி ஏந்திப் பிச்சைக்கு அவ்வூர்ப் பெருந்தெரு அடைந்ததும் - மணிமேகலை பிக்குணிக் கோலத்துடன் அப்பாத்திரத்தைக் கையிலேந்திப் பிச்சை யேற்றற்கு அந்நகரின் பெருந்தெருவினை யடைந்ததும், பிச்சை ஏற்ற பெய்வளை கடிஞையில் பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும் - பிச்சை ஏற்ற மணிமேகலையின் தெய்வக் கடிஞையிற் கற்பிற் சிறந்த ஆதிரைநல்லாள் பலர்க்கும் பகுத்துண்ணும் உணவினை இட்டதும், காரிகை நல்லாள் காய சண்டிகை வயிற்று ஆனைத்தீக் கெடுத்து அம்பலம் அடைந்ததும்- அழகின் மிக்க மணிமேகலை காயசண்டிகை என்னும் விஞ்சை மகளின் வயிற்றிலுள்ள ஆனைத்தீ யென்னும் தீராப் பசி நோயை அழித்து உலகவறவி என்னும் ஊரம்பலத்தை யடைந்ததும், அம்பலம் அடைந்தனள் ஆயிழை என்றே கொங்கு அலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும்-தேன் பொருந்திய நறிய மலர் மாலையினையுடைய அரச குமரன் மணிமேகலை உலகவறவியை அடைந்தாள் என்று ஆண்டுச் சென்றதும் ;

ஆங்கப் பாத்திரம் என்பதும் பாடம். ஆபுத்திரன் - ஓரந்தணன் ; தன்னைப் பெற்றவுடன் தாய் நீங்கிவிட, ஏழுநாள் வரையில் ஓர் ஆவினாற் பாலூட்டிப் பாதுகாக்கப் பெற்றமையின் இவன் இப் பெயரெய்தினன். சிந்தாதேவி-கலைமகள்; கற்றோர் சிந்தையில் இருப்பவள் என்பது பொருள். மற்று : அசை. மடக்கொடி-இளங்கொடி போல்பவள். பெய்வளை-இடப்பட்ட வளையினையுடையாள். அவ்வூர் - காவிரிப்பூம்பட்டினம். பத்தினிப் பெண்டிர் - ஆதிரை : ஒருமை. கடிஞை - பிச்சைப் பாத்திரம். பாத்தூண் - பகுத்துண்டற்குரிய உணவு. பாத்து - பகுத்து என்பதன் மரூஉ. ஈத்தது: வலித்தல் விகாரம். காயசண்டிகை: ஒரு வித்தியாதர மாது. ஆனைத்தீ - தணியாத பெரும் பசியைச் செய்வதொரு நோய்.

69--78. அம்பலம் அடைந்த அரசிளங் குமரன்முன் வஞ்ச விஞ்சையன் மகள் வடிவாகி-அம்பலத்தினை அடைந்த மன்னவன் சிறுவன் முன் மணிமேகலை விஞ்சையன் மனைவியாகிய காயசண்டிகையினுருவினைக் கொண்டு வஞ்சித்துச்சென்று, மறஞ்செய் வேலோன் வான்சிறைக் கோட்டம் - வென்றிதரும் வேற்படையினையுடைய சோழனது பெரிய சிறைச்சாலையை, அறஞ்செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்-அறச்சாலையாக்கிய திறமும், காயசண்டிகை என விஞ்சைக் காஞ்சனன் - விஞ்சையனாகிய காஞ்சனன் மணிமேகலையைக் காயசண்டிகை என நினைந்து, ஆயிழை தன்னை அகலாது அணுகலும் - உதயகுமரன் அவளை நீங்காது அணுகுதலும், வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை மைந்துடை வாளில் தப்பிய