4.மருட்கைச் சுவை
இனி மருட்கைச் சுவைக்கு
நிலைக்களனாகிய பகுதிகள் இப் பெருங்கதையின்கட் பற்பல உள்ளன ; ஈண்டு
இரண்டொன்று காண்பேம். இறந்தவரை எழுப்பித் தரும் விச்சையை யுடைய ஒரு முனிவனைப் பற்றி அமைச்சர்கள், என்னே ! இஃதென்னே ! என்னை ! இஃதென்னே !
''இருநிலம் புகுதலும் ஒருவிசும்
பிவர்தலும் வருதிரை நெடுங்கடல் வாய்க்கொண்
டுமிழ்தலும் மந்தரம் ஏந்தலும் என்றிவை
பிறவும் பண்டியல் விச்சை பயிற்றிய
மாக்களைக் கண்டும் அறிதும் கண்கூ
டாகச் செத்தோர்ப் புணர்க்கும் விச்சையொடு
புணர்ந்தோர்க் கேட்டும் அறியலம் வீட்டருஞ்
சிறப்பின் புண்ணியம் உடைமையின் நண்ணின
னாமிவன் ஒருதலை யாகத் தருதல்
வாய்''
(3. 4: 86-94)
என்று வியந்தோதலும்,
விரிசிகையின் அழகைக் கண்ட நகரமாந்தர்
''குடிமலி கொண்ட கொடிக்கோ
சம்பி வடிநவில் புரவி வத்தவர்
பெருமகற்கு ஆக்கம் வேண்டிக் காப்புடை
முனிவர் அஞ்சுதரு
முதுகாட்டு அஞ்சா
ரழலின் விஞ்சை
வேள்வி விதியிற் றந்த கொற்றத் திருமகள் மற்றிவ
டன்னை ஊனார் மகளி ருள்வயிற்
றியன்ற மானேர் நோக்கின் மடமகள் என்றால்
மெய்யன் றம்மொழி பொய்யென்
போரும்''
(4.17: 22-30)
எனவரும் இத்தொடக்கத்து வியத்தகு மொழிகளும் காண்க.
5.அச்சச் சுவை
அச்சத்தையும் சுவையாக்கி அகமகிழ நம்மனோர்க்களிக்கும்
நல்லிசைப் புலவர் ஆற்றல் பெரிது ! பெரிது ! உஞ்சை நகரத்திலே
தீப்பற்றிக் கொண்டது. அப்பொழுது ஆண்டு நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும்
அச்சச்சுவைக்கு ஒப்பற்ற எடுத்துக் காட்டுக்களேயாக
அமைந்துள்ளன.
''ஈற்றுப் பெண்டிர் இளமகத்
தழீஇ ஊற்றுநீர் அரும்பிய உள்ளழி
நோக்கினர் காற்றெறி வாழையிற் கலங்கிமெய்ந்
நடுங்கி ஆற்றேம் யாமென்று அலறினர்
ஒருசார் போதுகொண் டணியிற் பொறுக்க
லாற்றாத் தாதுகொண் டிருந்த தாழிருங் கூந்தலர் கருங்கேழ் உண்கண் கலக்கமொ
டலமரப் பெருஞ்சூற் பெண்டிர் பேரழல்
நோக்கி வருவோர்க் கண்டு வணங்கினர்
ஒருசார் தவழும் புதல்வரை ஒருகையாற்
றழீஇப் பவழம் சேர்ந்த பல்காழ்
அல்குலர் அவிழ்ந்த பூந்துகில் அங்கையின்
அசைஇ நகைப்பூங் கோதையொடு நான்ற
கூந்தற்கு மிகைக்கை காணாது புகைத்தீ
எறிப்பப் படைத்தோன் குற்றம் எடுத்துரைஇ
இறக்கேம் அங்கித் தேவன் அருளென
அயன்மனைப் பொங்குநீர்ப் பொய்கை புக்கனர்
ஒருசார்'' (1. 43 : 136-152)
என்றற் றொடக்கத்தன அச்சச்சுவைக்குச் சிறந்த
எடுத்துக்காட்டாம்.
|