முன்னுரை
 

இச்செவ்வியிலேயே தன் காதலியை ஆற்றியிருக்கப் பணித்துப்,

''பல்லோர் விரும்பப் பரந்துகண் அகன்று
 பொருள்வயிற் பிரிந்து பொலங்கல வெறுக்கையொடு
 இருள்வயின்''


தலைவனும் தலைவியின் பால் வந்து சேர்ந்தான். ஆ ! ஆ ! உலகமெல்லாம் இன்பம் ! இன்பம் ! இன்பம் ! எங்கும் அன்பு அன்பு அன்பு. இதோ காணமின் கார்காலமாகிய தன் காதலை எய்திய நிலமகள் அத் தமிழ்த் தலைவியர் இடைபோன்ற தன் கருப்பொருளாகிய முல்லைக் கொடியை எங்கும் தோற்றுவிக்கின்றாள். அம் முல்லையோ அத் தமிழ்த் தலைவியர் முறுவல் போன்று மலர்கின்றன. இனி இம்முல்லைப் பாட்டில் எஞ்சிய பகுதியைக் காண்மின்.

''ஏர்வளம் படுத்த எல்லைய வாகி
உறங்குபிடித் தடக்கை ஒருங்குநிரைத் தவைபோல்
 இறங்குகுரல் இறடி இறுங்குகடை நீடிக்
 கவைக்கதிர் வரகும் கார்பயில் எள்ளும்
 புகர்ப்பூ அவரையும் பொங்குகுலைப் பயறும்
 உழுந்துங் கொள்ளும் கொழுந்துபடு சணாயும்
 தோரையுந் துவரையும் மாயவு பிறவும்
 அடக்க லாகா விடற்கரு விளையுட்
 கொல்லை பயின்று வல்லை யோங்கிய
 வரையின் அருகா மரையா மடப்பினை
 செருத்தற் றீம்பால் செதும்புபடப் பிலிற்றி
 வெண்பூ முசுண்டைப் பைங்குழை மேயச்
 சிறுபிணை தழீஇய திரிமருப் பிரலை
 செறியிலைக் காயா சிறபுறத் துறைப்பத்
 தடவுநிலைக் கொன்றையொடு பிடவுதலைப் பிணங்கிய
 நகைப்பூம் புறவிற் பகற்றுயில் அமரா
 வரித்தார் அணிந்த விரிப்பூந் தொழுதிப்
 புல்லுதள் இனத்தொடு புகன்றுவிளை யாடும்
 பல்லிணர்ப் படப்பைப் படியணை பெருங்கடி
 பகர்விலைப் பண்டமொடு பல்லோர் குழீஇ
 நகரங் கூஉ நாற்றம் நந்திப்
 பல்லாப் படுநிரைப் பயம்படு வாழ்க்கைக்
 கொல்லைப் பெருங்குடிக் கோவலர் குழீஇய
 முல்லைப் பெருந்திணை''

என வரும்.

இத்தகைய செய்யுட்களைப் பாட்டுந் தொகையுமாகிய பழந் தமிழ்ப் பனுவல்களைப் பயின்ற திருவுடையார் பெரிதும் ஓதியுவந் திருப்பர் எனினும் அப் பழம்பனுவலின் பண்பு கெடாமல் அவையே இப்பெருங்கதையின்கண் மறுமலர்ச்சிக்குரிய புதுமையின்பத்தோடு விளங்குவதனை அறிவுடையோர் உணரலாம்.