இக் காண்டத்திற்கும் உரை வரைந்துதவியவர் பெருமழைப் புலவர் திரு பொ.வே.சோமசுந்தரானாரே யாவர். குறுந்தொகை, பத்துப்பாட்டு முதலிய பல நூல்களுக்கும் உரைவரைந்து உரையாசிரியர் எனப் பெயர் பெற்றவர் அவராதலின் அவ்வுரையின் பெருமை கூறாமலே நன்கு விளங்கும். மற்றைக் காண்டங்களுக்கும் அவருரை கிடைத்துள்ளது. அவை
அச்சிடப்படுகின்றன.

பெருங்கதை நான்காவது பகுதியாகிய வத்தவ காண்டத்தில் ''கொற்றங்கொண்டது''முதல் ''விரிசிகை வதுவை'' இறுதியாகப் பதினேழு பகுதிகளும் நரவாண காண்டத்தில் ''வாயாக் கேட்டது'' முதல் ''மதனமஞ்சிகை பிரிவு'' இறுதியாக ஒன்பது பகுதிகளும் உட்பிரிவுகளாக அமைந்து கிடக்கின்றன. வத்தவ காண்டத்திற் 'பந்தடி கண்டது' என்ற பகுதி என் நூலினும் காணப்படாத புதிய விளையாடலை எடுத்துக்காட்டிய இன்பத் தொகுதியாம். உதயணன் தன்னுருவை மறைத்துப் பெண்ணுருவாகப் பிடி மேலேறிச் சென்று பந்தடி காண்பதும், பந்தடி காண்பதும், பந்தடித்த பைந்தொடிகளிற் சிறந்தாள் ஒருத்தியைக் கண்டு பணிப்பெண் எனத் தெரிநதும் காதல் கொள்வதும், தேவியர் இருவர்க்கும் தெரியாத வகையில் அப்பணிப் பெண்ணைக் கூடிக் கலந்து இன்பந் துய்ப்பதும், தேவி கண்டு அவளைக்கடடி வைத்துக் கூந்தலைக் கத்தரிகையாற் குறைக்கத் துணிவதும், பின்னர் அவளைத் தங்கையென்றறிந்து தானே மணமுடித்துக் கூட்டுவிப்பதும் ஆகிய கதைப் பகுதிகள் கண்டு களிப்புறற்பாலன.