வினவும்போது, அவன் பணிவும் அன்போடுருகி யடிவணங்கி நிற்கும் பான்மையும் சிவநெறித் தொண்டர் தெய்வ வழிபாட்டின் சீர்மையை நன்கு விளக்குகிறது.
  "மாதங்கி வந்திடலு மலர்க்கரங்கண் முடிமீது
வைத்துச் செம்பொற்
பாதங்கண் மிசைவீழ்ந்து பணிந்தெனது தவப்பயன்றான்
பலித்த தென்னாப்
பூதங்கள் விளையாடுந் திருவாயிற் கற்றேர்போய்ப்
பொற்றே ரான
தீதென்று நீயருள்வாய் எனக்கேட்கக் குமரியெடுத்
தியம்ப லுற்றாள்"

என்ற பாடல் அது. காளிதேவியைக் கண்டவுடனே கைகள் தலை மேற்சென்று குவிந்தன. அடுத்துப் பாதங்களில் வீழ்ந்தான்; 'எனது தவப்பயன் பலித்தது. தெய்வத்தை நேரிற் கண்டதனால்!' என்று கருதினன். பின்னர்ப் பொற்றேரானது ஈது என்று காரணம் வினவினன் எனப் பொருள் அமைத்திருக்கும் முறையைக் காண்க. ஆசிரியர் காளிதேவியின் திருவருட் பயன் பெற்றவர் எனக் கூறும் வரலாறு உண்மை என்பதை வழிநடுவிற் காளியம்மையின் பாலைவனச் சிறப்பும், அடிமுதல் முடிவரையும் அமைந்த திருவுருவுச் சிறப்பும், பூதகணங்கள் பசாசகணங்கள் அரம்பையர் இடாகினிகள் அருகு நின்று பணிபுரியக் காத்திருக்கும் பான்மையும் பலபட விரித்துரைத்திருப்பதும், "எங்கள் தனிநாயகியிருந்த" (விவா. 112) எனக் கூறியிருப்பதும் எடுத்துக் காட்டும். தாம் வணங்கும் தெய்வமெனத் தோன்றுமாறு 'எங்கள் தனிநாயகி' எனக் கூறினர் எனக் கொள்க. பாரதம் பாடிய வில்லி போலவும் திருப்புகழ் பாடிய அருணகிரி போலவும் வண்ணச்சந்தம் அமைத்துப் பாடியிருக்கின்றார்.

இந்நூலிற் பலவிடங்களில் நகை யழுகை முதலிய மெய்ப்பாட்டிற் கியைந்தவாறு அச் சந்தங்கள் அமைந்துள்ளன. காளியின் தோற்றங் கூறும்போது, வீரம் எழுப்பும் ஒலியான சந்தம் உள்ளது. வல்லினவொலி மிகுந்து வந்திருப்பது காண்க. "தனத்தன, தனத்தன" என்பது சந்தக் குறிப்பு. "எறித்தசெழு முச்சுடரு மொத்தொரு தலத்திடை" என்ற கவி காண்க. இது முதல் 12 கவிகள் சந்தம் அமைந்தவை. பாலைவனச்சிறப்புப் பகரும்பொழுதும் சந்தம் அமைத்திருகின்றார். அச் சந்தம் பொதுவாக வெம்மையை விளக்கும் இடமாகலின், மெல்லின வொலிபட அமைந்துள்ளது. இனிச் சந்திரமதிக்குப் பலநாட்டு வேந்தரையும் எடுத்துக்காட்டும் இடத்தில் சந்தம் அமைத்திருப்பது மிகவும் புதுமையானது. ஒருநாட்டரசனைக் காட்டுவது ஒரு சந்தம்; அடுத்தநாட் டரசனைக் காட்டுவது வேறு சந்தம்;