- 242 -

மன்னன், நடனமாதராடும் நாடகத்தைக் கண்டும் பாடல்மகளிர் பாடும் இசையைச் கேட்டும் இனபுற்றானென்க.

பாடகம் - மகளிர் காலணி: ‘நல்லார் பாடகம்‘  (சீவக,510) ‘பாடகத் தாமரைச் சீறடி பணிந்து‘ (மணி, 25, 85). கேழ் - நிறம்.  சூடகம் - கைவளை:  ஹஸ்தகங்கணம்.               (3)

223.  வளையவர் சூழ லுள்ளான் மனமகிழ்ந் திருப்ப மன்னன்
  தளையவிழ் தொடையன் மார்பன் சண்டமுற் கருமன்போகி
  வளமலர் வனத்துள் தீய மனிதரோ டனைய சாதி
  களைபவன் கடவுட் கண்ணிற் கண்டுகை தொழுது நின்றான்

  (இ-ள்.) மன்னன் - --, வளையவர் சூழல் உள்ளால் - வளையணிந்த மகளிர்கூட்டத்திடையில், மனம் மகி்ழ்ந்து இருப்ப - மனங்களித்திருக்க, தளை அவிழ் தொடையல் மார்பன் - கட்டவிழ்ந்து மலர்ந்த பூமாலையணிந்த மார்பினையுடையவனான, சண்ட முன் கருமன்  - சண்ட கருமன், வளம் மலர் வனத்துள் - வளவிய மலர் செறிந்த வனத்தினுள், போகி - சென்று, தீய மனிதரோடு - தீவினைபுரியும் (கள்ளர் முதலிய) மனிதரோடு, அனைய சாதி - அவரை யொத்த துஷ்ட மிருகங்களையும், களைபவன் - போக்கிக்காவல் புரிபவன், கண்ணில் - கண்ணெதிரில், கடவுள் - (யோகத்தில் அமர்ந்திருக்கும் ஒரு) முனிவரனை, கண்டு- --, கை தொழுது - கைகுவித்து வணங்கி. நின்றான் - தாழ்ந்து நின்றான். (எ-று.)

மன்னவன் மகிழ்ந்திருக்க, காவல் புரியும் சண்டகருமன், தீயன அகற்றி வருங்கால் கடவுளைக் கண்டானென்க.

தளை - கட்டு. தளையவிழ்தல் - கட்டவிழ்தல்:  முறுக்கவிழ்தல்.  தொடையல், தொடுத்துக் கட்டும் மாலை.  சண்டம் என்ற பதம் முதலிலுடைய கருமன் - சண்டகருமன்; ‘அபயமுன்னுருசி ‘ யென்றது போல்வது.  இராசமாபுரத்துச் சண்டகருமன் (22) வேறு, இவன் வேறு, கடவுள் - முனிவன்:  ‘கடவுள் தே முனி நன்மைப் பேர்‘ என்பது நிகண்டு.  ‘கொல்லாத விரதத்தார்தங் கடவுளர் கூட்டமொத்தார்‘ என்றார்கம்பரும். சண்டகருமனால் நீக்கப்பட்டன, கள்ளர், புலி முதலியன என்று வடமொழிக்காவியம் கூறும்.         (4)