- 243 -
224.  அருவினை முனைகொ லாற்ற லகம்பன னென்னு நாமத்
  தொருமுனி தனிய னாகி யொருசிறை யிருந்த1 முன்னர்த்
  தருமுதல் யோகு கொண்டு தன்னள விறந்த பின்னர்
  மருவிய நினைப்பு மாற்றி வந்தது2 கண்டி ருந்தான்.

(இ-ள்.) அருவினை முனை கொல் ஆற்றல் - அழித்தற்கரிய வினையாகிய பகையை வெல்லும்  சக்திவாய்ந்த, அகம்பனன் என்னும் நாமத்து ஒரு முனி - அகம்பன ரென்பாரொரு தபோதனர், தனியன் ஆகி - தனித்து, முன்னர் ஒரு சிறை இருந்த - முன்னாக ஒரு பக்கத்தே இருந்த, தருமுதல் யோகு கொண்டு - மரத்தின் அடியில் யோகத்தில் அமர்ந்து, தன் அளவு - தாம் வரையறுத்த காலஎல்லை, இறந்த பின்னர் - கடந்த பிறகு, மருவிய நினைப்பு மாற்றி - தம் தியானத்தை மாற்றி, வந்தது கண்டு இருந்தான் - சண்டகருமன் (கோழிகளுடன்)  வந்ததைக் கண்டார்.

அகம்பனர், தாம் கொண்ட யோகம் நீங்கிக் கண்டாரென்க.

சிறை - பக்கம் , தருமுதல் முன்னர் எனினுமாம்.  தரு, அசோகு என்றல் மரபு.  யோகு - யோகம்: படிமைபோல் பதுமாசனம் முதலியவற்றில் வீற்றிருந்து தியானித்தல். ‘யோகமே தியானம்‘ (நிகண்டு, 11.) எனவும், ‘யோகொடு கறையற முயல்வதோர் கடவுள்‘ (சீவக. 96.) எனவும் கூறியிருப்பன அறிக.  காலத்தை வரையறுத்தே யோகம்கொள்வது மரபு: இதனைச் சாமாயிக காலம் என்பர். மருவிய -மேற்கொண்டிருந்த.  நினைப்பு - தியானம்.  யோகம் செய்ய மேற்கொண்ட கால எல்லை கழிந்த பின்னரே வேறு நினைப்பும் செயலும் உண்டாகும் என்பார், ‘மருவிய நினைப்பு மாற்றி...கண்டு‘ என்றார். (5)

 

1 யிருந்து,

2 வந்ததை