xLvii
பின்பு காஞ்சியினின்றும் சென்னைக்குப் போய்ப் பெருஞ் செல்வராகிய
மணலி சின்னையா முதலியார் அவர்களின் பேருதவியால் சிவாகம
சீலர்களாகிய சைவ அந்தணர்களைக் கொண்டு அவ்வாகமப் பொருள்களைச்
சின்னாள் பயின்று வல்லராயினர் முனிவர் பெருமானார். திரு.
முதலியாரிடத்தில் விடைகொண்டு காஞ்சியை அடைந்தனர்; சிவஞான
போதப் பேருரையாம் மாபாடியத்தை இங்கு முற்றுப்பெறச் செய்தனர்.
திருவாவடுதுறைக்குச் சென்று சுவாமிகள் ஆதீன பண்டார சந்நிதி பின்
வேலப்ப தேசிகரும் சின்னப்பட்டத்துத் திருச்சிற்றம்பல தேசிகரும்
உடனிருப்பக் கூட்டிய அவையில் யாவரும் மகிழ்ந்து பாராட்ட மாபாடியத்தை
விரித்துரைத்தனர்.
சுவாமிகள் மீளவும் வந்து காஞ்சியில் மாணவர்களுக்குப் பாடம்
சொல்வதும் திருவேகம்பரை வழிபடுவதுமாக இருந்த காலத்தில், பின்
வேலப்ப தேசிகர் திருப்பெருந்துறை சென்று தங்கியிருந்து இறைவன் திருவடி
நீழல் எய்தப்பெற்றனர். திருச்சிற்றம்பல தேசிகர் பண்டார சந்நிதியாக
அமர்ந்து அம்பலவாண தேசிகரைச் சின்னப்பட்டத்தில் அமர்த்தினர். மாதவச்
சிவஞான சுவாமிகள் அவ்விழாவிற்குச் சென்று பங்குகொண்டு மீண்டும்
காஞ்சியை நண்ணினர்.
மார்கழித் திங்களில் திருவெம்பாவை ஓது நாட்களில் திருத்தொண்டத்
தொகை ஓதக் கூடாமையால் வருந்திய மெய்யன்பர்களின் குறை தீரத்
திருத்தொண்டர் திருநாமக் கோவை நூல் செய்துதவினர் முனிவரர்.
திருமுல்லை வாயிலில் வழிபாடு செய்தகாலை ‘வடதிரு முல்லைவாயில்
அந்தாதியையும், குளத்தூரில் அங்ஙனே தரிசனம் நிகழ்ந்த பொழுது
‘குளத்தூர்ப் பதிற்றுப்பத் தந்தாதியையும், சோமேசர் முதுமொழி
வெண்பாவையும், அமுதாம்பிகை பிள்ளைத் தமிழையும், இளங்காடு என்னும்
தலத்தில் இளசைப் பதிற்றுப்பத் தந்தாதியையும் இயற்றியருளினார் சுவாமிகள்.
காஞ்சியில் மாணாக்கர் சூழ இருந்துழிக் கம்பர் அந்தாதி, திருவேகம்பர்
ஆனந்தக் களிப்பு என்னும் சிறு நூல்களை இயற்றினர். காஞ்சியில் வாழ்
பெருமக்கள் வேண்டுகோளுக்கு இசைந்து வடமொழியிலுள்ள காஞ்சிப்
புராணத்தைத் தமிழில் மொழிபெயர்த் தருளினர்.
சுவாமிகள் தாம்மொழி பெயர்த்தருளிய காஞ்சிப் புராணத்தைப்
புலவரவையில் அரங்கேற்றுங்கால் திருவேகம்பமுடையார் வணக்கத்தை
முதற்கண் கூறாது திருச்சிற்றம்பல முடையார்
|